Sunday 2 March 2014

தமிழ்த் திரையில் சாதனைப் பெண்கள் முதல் இயக்குநர் டி.பி.ராஜலட்சுமி..!



ஆண்களே ஆதிக்கம் செலுத்திய திரையுலகில் ஒரு பெண் இயக்குனராக வெற்றி பெறுவதென்பது இப்போதும் கூட சாதனைதான். எனில் அன்றைய காலகட்டத்தில் ஒரு பெண், திரைப்படத்தை இயக்குவது என்பது ஆண்கள் அனைவரும் மூக்கின்மேல் விரலை வைக்கும் செயல். அந்த செயலை செய்தவர் டி.பி. ராஜலட்சுமி.

இவர் தஞ்சை மாவட்டம் திருவையாற்றைச் சேர்ந்தவர். இசையும் நடனமும் பயின்ற அவர், நாடகக்காவலர் சங்கரதாஸ் சுவாமிகள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்து பெயர் பெற்றார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க அவர் முடிவெடுத்ததும், ஆச்சாரமான அவரது குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்ப, ராஜலட்சுமியை விவாகரத்து செய்தார் அவரது கணவர்.

மெளனப் படங்களை இயக்கிய ராஜாசாண்டோவின் இயக்கத்தில் உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய படங்களில் ராஜலட்சுமி நடித்தார். தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் (1931) படத்தில் நடித்த பெருமை ராஜலட்சுமிக்கு உண்டு. எல்லீஸ் ஆர்டங்கன் இயக்கத்தில் சீமந்திரி, கே. சுப்ரமணியம் இயக்கத்தில் பக்த குசேலா, டி.ஆர். ரகுநாத் இயக்கத்தில் பரஞ்ஜோதி எனத் தொடர்ந்து 20 படங்களுக்கு மேல் நடித்தார்.

தனது 20வது வயதில் டி.வி. சுந்தரத்தை காதல் மறுமணம் செய்தார் ராஜலட்சுமி. மல்லிகா என்ற ஆதரவற்ற பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்த அந்த இணையருக்கு, அதன்பின் பிறந்த குழந்தையின் பெயர் கமலா. அக்குழந்தை பிறந்த பிறகு 1936 இல் டி.பி.ராஜலட்சுமி இயக்குநரானார். படத்தின் பெயர் மிஸ் கமலா. இப்படம்தான் தமிழில் ஒரு பெண் இயக்குநர் இயக்கிய முதல் படம். அதன்பின் மதுரை வீரன் (எம்.ஜி.ஆர். நடித்தது அல்ல) என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். திரைத்துறையை பெண்களாலும் ‘ஆட்டிவைக்க’ முடியும் என நிரூபித்தவர் டி.பி. ராஜலட்சுமி.

முதல் சகலகலாவல்லி - பானுமதி:

அஷ்டாவதானி எனப் பெயர் பெற்றவர், நடிகை பானுமதி. ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர். அவரது அப்பா வெங்கடாச்சலய்யா கர்நாடக இசை அறிந்த மேடை நாடகக் கலைஞர். அதனால் சிறு வயதிலேயே பானுமதிக்கு பாட்டு, நடிப்பு ஆகியவற்றில் பயிற்சி கிடைத்தது. ‘வரவிக்ரயம்’ என்ற தெலுங்கு படத்தில் 1938 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார் பானுமதி. தமிழ்ப் படங்களிலும் அவருடைய நடிப்பாற்றல் வெளிப்பட்டது. தமிழிலும் தெலுங்கிலும் எடுக்கப்பட்ட ‘தர்மபத்தினி’ என்ற படம் மூலம் தமிழக ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பானுமதி.
நாகேஸ்வரராவுடன் லைலா மஜ்னு, அறிஞர் அண்ணா வசனத்தில் கலைவாணர் என்.எஸ்.கே. எடுத்த நல்லதம்பி, எம்.கே. ராதாவுடன் அபூர்வ சகோதரர்கள், பி.யு. சின்னப்பாவுடன் ரத்னகுமார் போன்ற படங்களில் நடித்த பானுமதி, 1953 இல் சண்டிராணி என்ற படத்தை இயக்கினார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை கதை, கலைஞர் மு. கருணாநிதியின் வசனம், நாயகனாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த மெகாஹிட் படமான மலைக்கள்ளனில் பானுமதிதான் நாயகி.

சிவாஜியுடன் கள்வனின் காதலி படத்தில் முதன் முதலில் ஜோடி சேர்ந்த பானுமதி அதன் பிறகு எம்.ஜி.ஆருடன் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரைவீரன், நாடோடி மன்னன், தாய்க்குப்பின் தாரம், ராஜாதேசிங்கு, கலையரசி, காஞ்சித்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சிவாஜியுடன் ரங்கோன்ராதா, மக்களைப் பெற்ற மகராசி, அம்பிகாபதி, ராணி லலிதாங்கி, ராஜபக்தி, அறிவாளி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சதாரம், அன்னை உள்ளிட்ட பல படங்களில் அவருடைய நடிப்பு முத்திரை பதித்தது.

பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த போதும் பானுமதிக்கு படங்களில் தனி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் அளிக்கப்பட்டு வந்தன. தங்களுக்கு ஜோடி பானுமதி என்றால் பெரிய நடிகர்கள் கூட சற்று அச்சத்துடன் சில அடிகள் தள்ளி நின்றே நடிப்பார்கள்.

நடிப்பில் ஹீரோக்களுடன் போட்டிபோட்ட பானுமதி, தனித்துவம் கதாநாயகர்களுடன் சேர்ந்தும் சொந்தக் குரலில் பாடியும் வந்தார். (எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நாயகர்களுக்குப் பாடல் காட்சிகளில் பின்னணிக் குரல்தான்) ‘அழகான பொண்ணு நான்.. அதற்கேற்ற கண்ணு தான்...’ ‘மாசிலா உண்மைக்காதலே....’, ‘ஆஹா நம் ஆசை நிறைவேறுமா....’ ‘ஆசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ’ ‘சம்மதமா நான் உங்கள்கூட வர சம்மதமா’.... என அவர் பாடிய பல தமிழ்ப்பாடல்கள் இன்றும் நம் காதுகளுக்கு சுகம் தரும்.

1986 இளையராஜாவின் இசையில் ‘கண்ணுக்கு மை எழுது’ என்ற படத்தில் ‘வாடா மல்லியே நான் சூடா மல்லியே’ என்ற பாடலைப் பானுமதி பாடினார். 1992 இல் ‘செம்பருத்தி’ படத்திலும் இளையராஜா இசையில் ‘செம்பருத்திப் பூவு.. சித்திரத்தைப் போல’ என்ற பாடலை பாடினார் பானுமதி. தெலுங்கில் சில நடிகைகளுக்கும் பானுமதி பின்னணி பாடியுள்ளார்.

படங்களை இயக்கியதுடன் இசையமைப்பாளராகவும், படத்தொகுப்பாளராகவும் (எடிட்டர்) பானுமதி செயல்பட்டார். அதனால்தான் அவரால் தொடர்ச்சியாக சொந்தப் படங்களைத் தயாரிக்க முடிந்தது. நாயகியாக நடிப்பது குறைந்த பிறகும் தனக்குப் பிடித்த கதைகளை அவர் இயக்கி வந்தார்.

குழந்தைகளுக்காக அவர் இயக்கிய ‘பத்த துருவ மார்க்கண்டேயா’ என்ற படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. கதை எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்து தெலுங்கில் (நாலு நேனு) தனிப்புத்தகமே எழுதி அதற்காக தேசிய விருதும் பெற்றவர் பானுமதி. 2003இல் அவருக்கு பத்மபூஷன் விருதை இந்திய அரசு வழங்கியது. தமிழ்த் திரையுலகின் (தென்னகத் திரையுலகின்) சகலகலாவல்லி பானுமதி.

முதல் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி:

தமிழ்த் திரையுலகின் முதல் கனவுக்கன்னி, டி.ஆர்.ராஜகுமாரி. முகப்பொலிவும் பேசும் கண்களும் பல ரசிகர்களின் தூக்கத்தைக்கெடுத்தன. தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயிதான் திரையுலகில் டி.ஆர். ராஜகுமாரி எனப் புகழ்க்கொடி நாட்டியவர். நடனமும் பாட்டும் அறிந்த ராஜகுமாரி அறிமுகமான படம், குமார குலோத்துங்கன்.
1931 இல் வெளியான அப்படம், அப்படியொன்றும் வெற்றிபெறவில்லை. தமிழ்த் திரையுலகம் தனது முதல் கனவுக்கன்னியை அடையாளம் காண மேலும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

1941 இல் வெளியானது ‘கச்ச தேவயானி’ கே. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளியான இப்படம் ராஜகுமாரிக்கு பெயரையும் ரசிகர்களுக்கு தங்கள் மனதில் குடியிருக்க ஒரு நடிகையையும் தந்தது.

அடுத்து வந்தது தமிழின் மெகாஹிட்டான ‘ஹரிதாஸ்’, தியாகராஜ பாகவதருடன் டி.ஆர்.ராஜகுமாரி ஜோடி ‘:wsஜி நடித்த இப்படத்தில்தான் ராஜகுமாரியின் முழுப் பரிமாண நடிப்பும் அழகும் வெளியிடப்பட்டன. 1944 இல் வெளியான இப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்ட பெருவெற்றிப்படம். அதில் இடம் பெற்ற ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாட்டிற்கு பாகவதருடன் ஜோடி சேர்ந்து கலக்கியிருந்தார் டி.ஆர்.ராஜகுமாரி.

அன்றைய முன்னணி நாயகர்களான பி.யு. சின்னப்பா டி.ஆர். மகாலிங்கம் ஆகியோருடன் நடித்த ராஜகுமாரி அடுத்த தலைமுறை நாயகர்களான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி ஆகியோருடனும் நடித்தார். கலைஞரின் திரைக்கதை வசனத்திலும் சிவாஜியின் அபார நடிப்பினாலும் உருவான ‘மனோகரா’ படத்தில் வில்லி பாத்திரமான வசந்த சேனையாக நடித்தவர் டி.ஆர். ராஜகுமாரி. எம்.ஜி.ஆருடன் குலேபகாவலி போன்ற படங்களில் நடித்தார்.

காலமாற்றத்தால் புதுபுது நாயகிகள் திரையுலகில் கொடிநாட்டியபோது, டி.ஆர். ராஜகுமாரி தன் சகோதரரும் இயக்குநருமான டி.ஆர். ராமண்ணாவுடன் இணைந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் என்ற அவர்களது பட நிறுவனத்தின் முதல் தயாரிப்பு, 1953 இல் வெளியான வாழப்பிறந்தவன். அடுத்த ஆண்டில், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சேர்ந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’யைத் தயாரித்தனர்.

படம் வெற்றிபெறவில்லை. எனினும் குலேபகாவலி, பாசம், பெரிய இடத்துப்பெண், பணம் படைத்தவன், பறக்கும்பாவை என எம்.ஜி.ஆரை வைத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களைத் தயாரித்தார். டி.ஆர். ராஜகுமாரி கடைசியாக நடித்த படம், ‘வானம்பாடி’ சென்னை தியாகராய நகரில் அவர் பெயரிலேயே ராஜகுமாரி என்ற திரையரங்கத்தையும் கட்டினார்.

ரசிகர்கள் பலரின் கனவுக்கன்னியாக இருந்த டி.ஆர். ராஜகுமாரி தனக்கான வாழ்க்கை நாயகனைத் தேர்ந்தெடுக்கவேயில்லை. தனிமையிலேயே வாழ்ந்த அவர் 1999 ஆம் ஆண்டு தனது 77வது வயதில் காலமானார். அவருடைய கடைசிக்காலங்களில் யாரையும் சந்திக்கவில்லை. அவரது புகைப்படமும் வெளிவராமல் பார்த்துக்கொண்டார். இறக்கிவைக்க முடியாத சோகத்துடன் முடிந்து போனது அந்த கனவுக் கன்னியின் வாழ்வு.

சாரதாவை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சிவாஜிகணேசன்...!



சிறந்த நடிகைக்கான தேசிய விருதை (ஊர்வசி பட்டம்) மூன்று முறை பெற்றவர் நடிகை சாரதா.

இவரை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், சிவாஜிகணேசன். சாரதாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் தெனாலி ஆகும். தந்தை வெங்கடேசலு. தாயார் சத்தியவதிதேவி. சாரதா ஆந்திராவில் பிறந்தாலும், வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஆந்திராவில் 8 ஆம் வகுப்பு வரை படித்தார்.

சாரதா சிறுமியாக இருந்தபோதே பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். 1956 ஆம் ஆண்டு என். டி. ராமராவ் நடித்த ‘கன்னியாசுலகம்’ என்ற படத்தில் சிறுமி வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் ‘ரத்தக்கண்ணீர்’ என்ற தெலுங்கு நாடகத்தில் நடித்தார்.

தனது 14 வது வயதில் 100 க்கும் மேற்பட்ட நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார். 1961 ஆம் ஆண்டு நடிகர் நாகேஸ்வரராவின் சொந்த படக் கம்பெனியான அன்னபூர்ணா பிக்சர்ஸ் மூலம் ‘இத்தரு பித்ருலு’ (இரு நண்பர்கள்) படத்தில் தங்கை வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்தார்.

இது பற்றி சாரதா கூறியதாவது :-

‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கலைத்துறையில் ஈடுபாடு இல்லை. சங்கீதம், நாட்டியம் ஆகியவற்றை எனக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் என் தாயாருக்கு இருந்ததால், 6 வயதில் பரத நாட்டியம் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 13 வயதில் நாடகத்தில் எப்போதாவது ஒரு முறை நடித்து வந்தேன்.

சென்னைக்கு வந்தபின், படங்களில் சிறுமி வேடத்தில் நடிக்க ஆரம்பித்தேன். ஒரு முறை ‘அனார்கலி’ என்ற படத்தில் அஞ்சலிதேவி நடித்துக்கொண்டு இருந்தபோது அவரை சந்தித்தேன். தன் தலையில் இருந்த கிரீடத்தை, என் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தார் சிறந்த நடிகராக வர வேண்டும் என்று வாழ்த்தினார்.

என் தாயாரின் முயற்சியால்தான் நான் கலைத்துறைக்கு வந்தேன். இல்லையென்றால் கலைத்துறைக்கு வந்து இருக்க முடியாது. எல். வி. பிரசாத், புதுமுகங்களுக்கு பயிற்சி கொடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்.

நானும் அங்கு சினிமாவில் நடிக்க பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு நாகேஸ்வரராவ் படத்தில் தங்கை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.’இவ்வாறு சாரதா கூறினார்.

இந்த நிலையில் ‘திப்பதி’ என்ற தெலுங்கு நாடகத்தில் நடிகை சாரதா நடித்து வந்தார். ஒரு நாள் அந்த நாடகத்திற்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.
நாடகத்தில் சாரதாவின் நடிப்பு அற்புதமாக இருந்ததை, சிவாஜி கவனித்தார். நாடகத்தில் மிகவும் சிறப்பாக நடித்த சாரதாவை, தமிழ்ப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சிவாஜி முடிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த ‘குங்குமம்’ என்ற படத்தில் சாரதா இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை விஜயகுமாரியும் நடித்தார்.

கிருஷ்ணன் பஞ்சு டைரக்டர் செய்தனர். அதனைத் தொடர்ந்து ‘துளசிமாடம்’, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ போன்ற படங்களில் சாரதா நடித்தார். 1972 ஆம் ஆண்டில் மாதவன் இயக்கத்தில் ‘ஞானஒளி’ படத்திலும் 1978 ஆம் ஆண்டு ராமண்ணா டைரக்ஷனில் ‘என்னைப்போல் ஒருவன்’ படத்திலும், சிவாஜியுடன் சாரதா மிகவும் சிறப்பாக நடித்து புகழ் பெற்றார்.

சிவாஜியுடன் நடித்தது பற்றி சாரதா கூறியதாவது :-

‘திருப்பதி நாடகத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த போது, அந்த நாடகத்திற்கு சிவாஜி தலைமை தாங்க வந்தார். நாடகத்தில் எனது நடிப்பை பார்த்து ‘குங்குமம்’ படத்திற்கு தயாரிப்பாளரிடம் கூறி, எனக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்தார்.

அப்போது எனக்கு கெரக்டர் நடிப்பை சொல்லிக் கொடுத்தார். எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜியிடம் கற்றேன். ‘குங்குமம்’ படத்தில் அவருடன் முதன் முதலில் நடிக்க செல்வதற்கு முன்பு ரொம்பவும் பயந்தேன்.

அதற்கு சிவாஜி, ‘நான் என்ன புலியா, சிங்கமா? நானும் மனிதன்தானே! எதற்காக பயப்படுகிறாய்!’ என்றார். அதன் பிறகுதான், எனக்கு பயம் போய் தைரியம் வந்தது நடிப்பில் ஆர்வம், இருப்பவர்களுக்கு சிவாஜி நடிப்புச் சொல்லி தருவார்.

ஆர்வம் இல்லாதவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்! நடிப்பதற்கு முன்பு ‘இந்த கெமரா கோணத்தில் இப்படி நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று சொல்லித் தருவார்’ இவ்வாறு நடிகை சாரதா கூறினார்.

உப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும் ...!



அதிக உப்பு நிறைந்த பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை உட்கொள்வது இருதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பாக்கெட் ஃப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடுபவர்களுக்கு சரியாக 30 நிமிடத்தில் அதற்கான பாதிப்பு தெரியவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உப்பு சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகள் எளிதில் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும் எண்ணெயில் பொறித்த உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் இருதயத்திற்கு ஆபத்தானது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள் ளனர். ஆஸ்திரேலி யாவின் அடிலெய்டில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலாளர் ஆய்வு குழுமம் இந்த ஆய்வினை மேற்கொண்டது.

ரத்த நாளங்கள் பாதிப்பு:

டிக்கின்சன் குழு வினர் மேற்கொண்ட ஆய்வில் 16 ஆரோக்கிய மான நபர்கள் ஆய் விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 8 நபர் களுக்கு குறைந்த அளவு உப்பு உபயோகப் படுத் தப்பட்ட தககாளி சூப் 10 முறை வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு உப்பு அதிகம் பயன் படுத்தப்பட்ட நொறுக்குத் தீனி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம், இருதய துடிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய் யப்பட்டது. இதில் அதிக உப்பு பயன்படுத்தப்பட்ட பின்னர் ரத்தமானது இரு தய அறைகளுக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ரத்த அழுத் தமும் அதிகரித்திருந்தது.

அதிக உப்பு ஆபத்து:

இதே ஆய்வு மீத முள்ள 8 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. குறைந்த அளவு உப்பு பயன்படுத்தும் போது இருந்த ரத்த ஒட்டத்தின் அளவானது, அதிக அளவு உப்பு பயன் படுத்தியவுடன் இரண்டு மணி நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தது தெரியவந்தது. எனவே அதிக அளவு உப்பும், எண்ணெயில் பொறித்த உணவுகளில் உள்ள கொழுப்பும் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கிறது என்றும் அவர்கள் தங்களின் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

மேலும் உப்பும், கொழுப்பும் அடைப்பினை ஏற்படுத்தி நைட்ரிக் ஆக்ûஸடை வெளியிடுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இருதய பாதிப்பு உடனடியாக ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எண்ணெயில் பொறித்து அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் அதிக அளவில் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் உள்ளது. இவை ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே அதிக உப்பு சேர்க்கப்பட்ட எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பது ஆயுளை குறைக்கும் என்றும் ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளிவரும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. நம் ஊரில் நிறைய பேர் ஊறுகாயும், அப்பளமும்தான் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மூச்சு விடும் அளவிலும் ஒழுங்குமுறை இருக்கவேண்டும்..!



சித்தர்கள் என்ற சொல்லிற்கு சித்தத்தை அறிந்தவர்கள் என்று பொருள். சித்அறிவு. உடம்பிற்குள் 96 வகையான வேதியியல் தொழில்கள் நடைபெறுகின்றன என்ற உண்மையை (அறிவியலை) அறிந்தவர்கள் சித்தர்கள். அதை சித்தர் தத்துவங்கள் என்ற பெயரில் அழைத்தனர். மனித உடல் அவரவர் கையால் (உயரத்தில்) எண் சாண் ஆகும்.

இதை ஒளவையார் `எறும்பும் தன் கையால் எண் சாண்' என்கிறார். உயிர்கள் தன் அகலத்தில் நான்கு சாண் அளவு பருமனும் 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளதாகும். இந்த மனித உடலில் 96 வகையான செயல்கள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. இச்செயல்களை மருத்துவக் கண்ணோட்டமுள்ளவர்கள் அறிவர்.

இன்று நவீன மருத்துவ முறையில் உடற்கூற்றுத் தத்துவங்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச்சித்தர்கள் இத்தத்துவங்களை தன் உடலையே சோதனைச்சாலையாக்கி அறிந்து, ஆன்மீகப்பெயர்களில் இவற்றை அழைத்துள்ளனர். மனித உடல் இயங்கும் விதத்தை 96 வகையான தத்தவங்களின் அடிப்படையில் சித்தர்கள் பகுத்தனர்.

சித்தர்கள் குறிப்பிடும் இந்த 96 தத்துவங்களில் (உடலின் வேதியியலில்) ஏதாவது மாற்றம் ஏற்படின் நோய் ஏற்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் இயக்கம் பாதிக்கும். உதாரணமாக நீர் ஒருவர் உடலிலிருந்து அதிகமாக வெளியேறக் கூடாது. வெப்பம் அளவாய் இருக்க வேண்டும். அது போல் நாடிகள் சர்வர இயங்க வேண்டும்.

இதுதவிர, மூச்சு விடும் அளவிலும் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21600 என்றும் இது கூடுவதும் குறைவதும் என்று நிலை மாறினால் ஆயுள் குறையும் என்றும் , 21600 முறை தினமும் மூச்சுவிடக்கூடிய மனிதன்1 120 ஆண்டுகள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் கணித்துள்ளனர்.

முறையற்ற வாழ்க்கைப்போக்கை மேற்கொள் பவர்களுக்கு சுவாசம் அதிகரித்து ஆயுள் குறைகிறது என்கிறார் திருமூலர்( திருமந்திரம்729). முறையான மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு நடுமூச்சைச்சார்ந்து சுவாசிக்கக் கற்றால் 166 ஆண்டுகள் வரையிலும் வாழலாம் என்கிறார் இப்பாடலில்.

முதுமையில் அல்லது நோயினால் இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு மரணம் எத்தனை நாட்களுக்குள் ஏற்படும் என்பதையும் துல்லியமாகக் கணித்துள்ளனர். மற்றவர் புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு 9 நாளிலும்,காது கேட்காவிட்டால் 7 நாளிலும்,நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு 5 நாளிலும்,மூக்குநுனி தெரியாதவர்களுக்கு 3 நாளிலும், இரண்டு கண்களையும் கையால் அமுக்கினால் கண்ணீர் வராதவர்களுக்கு 10 நாளிலும் மரணம் வரலாம் என்கிறார்கள் சித்தர்கள்.

சித்தர்கள் ஆன்மீகவாதிகள் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் விஞ்ஞானிகளே. மெய்ஞானத்தோடு இணைத்து உடல்அறிவியலை எளிய மக்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்துள்ளார்கள். உயிரினங்கள் ஒரு நிமிடத்திற்கு விடும் மூச்சு அளவு.

தேரை (11) (நிமிடம்) 500-1000 வாழும் ஆண்டு
திமிங்கிலம் (34) 200-250 வாழும் ஆண்டு
ஆமை (45) 150-155 வாழும் ஆண்டு
யானை (11-12) 100-120 வாழும் ஆண்டு
பாம்பு (78) 126-130 வாழும் ஆண்டு
குரங்கு (31-32) 20-30 வாழும் ஆண்டு
முயல் (38-39) 810 வாழும் ஆண்டு
பண்டையமனிதர் (12-13) 100-120 வாழும் ஆண்டு
இக்காலமனிதர் (1617) 60-80 வாழும் ஆண்டு.

உலக சித்தர்கள் நாள்..........

உலக சித்தர்கள் நாள் என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதலாவது உலக சித்தர்கள் தினம் 2009 ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டது. 2வது உலக சித்தர்கள் நாள் 2010 ஏப்ரல் 14 இல் சென்னை, அடையாறில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 2000 இற்கும் அதிகமான சித்த மருத்துவர் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மூன்றாவது சித்தர்கள் நாள் கேரளாவில் திருவனந்தபுரத்தில் 2011 ஏப்ரல் 14, 15 ஆம் நாட்களில் கொண்டாடப்பட்டது.

""தெகிடி - "" வித்தியாச வெற்றித்தயாரிப்பு தான்.. "கீப்-இட்டு அசோக்..!



"அட்டகத்தி, "பீட்சா, "சூதுகவ்வும் உள்ளிட்ட வெற்றிபடங்களையும், வித்தியாச படங்களையும் தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனத்தின் மற்றுமொரு வித்தியாச வெற்றித்தயாரிப்பு தான் ""தெகிடி

கதைப்படி, கதையின் நாயகர் வெற்றி எனும் அசோக் செல்வன், கிரிமினாலஜி படித்துவிட்டு உயிருக்கும், உடைமைக்கும், திறமைக்கும் சவால் விடும்படியான துப்பறியும் வேலை பார்க்க துடிப்புடன் சொந்த ஊரான தஞ்சாவூரில் காத்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தபடியே சென்னையில் உள்ள ஒரு தனியார் டிடக்டீவ் ஏஜென்சியில் இருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. அப்பாவிடம் சொல்லிவிட்டு சென்னை கிளம்புகிறார்.


சென்னை சென்றடைந்ததும், தன்னை படிக்கும்போதே புத்திசாலியாக ஒப்புக்கொண்ட பேராசிரியரின் ஆசியை பெற்றுக்கொண்டு அந்த தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலைக்கு சேருகிறார். வேலைக்கு சேர்ந்த உடனேயே சிலரது புகைப்படங்களும், அவர்களது முகவரியும் வெற்றியிடம் தரப்படுகிறது. அவர்களைப்பற்றிய ஏ "டூ இசட் டீடெயில்களை விசாரித்து துப்பறிந்து அந்த நிறுவனத்தில் நல்ல பெயர் எடுக்கிறார் வெற்றி. ஒரு சில அசைமென்ட்டுகளுக்கு அப்புறம் மது எனும் ஜனனி ஐயரின் புகைப்படத்தையும் அவரிடம் வழங்கும் அந்நிறுவனம், அவர் பற்றி தகவல்களையும் துப்பறிய சொல்கின்றனர்.

ஏற்கனவே ஒருமுறை வெற்றி, தன் துப்பறியும் பணிக்காக கமலக்கண்ணன் என்பவரது வீட்டை கள்ளத்தனமாக திறக்க முற்படும்போது வெற்றியை பார்த்துவிட்டு அவரை திருடனாக கருதுகிறார் மது அலைஸ் ஜனனி ஐயர். தன்னை பின் தொடரும் வெற்றி எனும் அசோக் செல்வனை பார்த்துவிட்டு சப்தம் போடுகிறார். வெற்றி அவரது வீட்டிற்கே போய் மது "அலைஸ் ஜனனியை சமாதானம் செய்கிறார். இருவருக்குள்ளும் காதல் மலருகிறது. ஒரு பக்கம் ஜனனி ஐயரைப்பற்றி தகவல்களை திரட்டிக்கொண்டே மற்றொரு பக்கம் அவருடன் லவ் டூயட் என்று காதலிலும் உலா வருகிறார் "வெற்றி அசோக் செல்வன்.

இந்நிலையில் வெற்றி தன் துப்பறியும் நிறுவனத்திற்காக தகவல் திரட்டி தந்தவர்கள் வரிசையாக விபத்தில் மரணமடையும் செய்திகளை பார்க்கும் இவர், அதிர்ச்சி அடைகிறார். அது பற்றி துப்பறிய கிளம்பும் வெற்றி,கண் முன்னே இன்னும் சில கொலைகளை விபத்தாக பார்க்கிறார். எல்லாமே தான் துப்பறிந்து தந்த மனிதர்கள் என்பதால் மேலும் திகிலடைகிறார் வெற்றி எனும் அசோக் செல்வன்!

தான் வேலை பார்த்த டிடெக்டீவ் ஏஜென்சி மீது சந்தேகம் கொண்டு அவர்களைத்தேடி ஆக்ரோஷத்துடன் புறப்படுகிறார். அவர்கள் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு "எஸ் ஆகி விடுகின்றனர். தன்னையும், தன்னால் துப்பறியப்பட்ட தன் காதலியையும் காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் ஹீரோ, இச்சமயத்தில் கமலக்கண்ணன் இறப்பதற்கு முன் அவருடன் இறுதியாக செல்போனில் பேசிய காரணத்திற்காக அறை நண்பருடன் கைது செய்யப்படுகிறார். காதலி ஜனனிக்கு மொத்த உண்மையும் தெரிய வருகிறது. முதலில் கோபம் கொள்ளும் அம்மணி, ஒருவழியாக சமாதானமாகி வெற்றியின் பேராசிரியர் உதவியுடன் அசோக்கையும், அவரது நண்பனையும் ஜாமினில் எடுக்கின்றனர்.

லாக்கப்பில் இருந்து வெளியில் வரும் வெற்றி-அசோக், தனது இந்த நிலைக்கு காரணமானவர்களை, தன்னை கைது செய்த போலீஸ் ஜெ.பி. உதவியுடனும், அவரது உதவி இல்லாமலும் சட்டத்தின் முன் நிறுத்தவும், விபத்து என ஜோடிக்கப்பட்டு இத்தனை கொலைகளுக்கான நோக்கத்தையும் தெரிந்து கொள்ள முற்படுகிறார். அவர்களது நோக்கம் படம் பார்க்கும் நமக்கும் பகீர் என்றிருப்பது "தெகிடி படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி!

ஒருவழியாக ஹீரோ மோசமானவர்களில் முக்கியமானவர்களான அத்தனை பேரையும் திட்டமிட்டபடி சட்டத்தின்முன் நிறுத்தினரா.? தண்டனை தந்தாரா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், எதிர்பார்க்காத திருப்பங்களுடன் படமாக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸில் சொல்லப்பட்டிருக்கிறது. வாவ்! சூப்பர்!!

ஹீரோவாக வெற்றியாக அசோக் செல்வன், தமிழ்வாணன் நாவல்களில் படித்த துப்பறியும் சங்கர்லாலை நம் கண்முன் காட்சிக்கு காட்சிக்கு நிறுத்துகிறார். ரொமான்ஸ் காட்சிகளிலும், இவர் அறிமுகமான "வில்லா படத்தை காட்டிலும் "நல்லா நடித்திருக்கிறார். "கீப்-இட்டு அசோக்!

மதுவாக ஜனனி ஐயர், சபாஷ் ஐயர் எனும்படி கண்களாலேயே அத்தனை பாவங்களையும் வெளிப்படுத்தி ரசிகனை சீட்டோடு கட்டிப்போடுகிறார். போலீஸ் ஆபிஸர் ஜெயப்பிரகாஷ், சைலேஷ் - ஜெயக்குமார்,நண்பர் நம்பியாக வரும் கலை, சாய் - கமலக்கண்ணன், பேராசிரியர் சடகோபன், மாதவன், சக்கரபாணி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்து பலே சொல்ல வைத்திருக்கின்றனர்.

தினேஷ் கிருஷ்ணனின் இருட்டிலும் மிளிரும் ஒளிப்பதிவு, நிவாஸ் கே.பிரசன்னாவின் மிரட்டும் இசை, லியோ ஜான்பாலின் படத்தொகுப்பு, புதியவர் பி.ரமேஷின் இயக்கம் உள்ளிட்ட ப்ளஸ்பாயிண்ட்டுகள் "அட்டகத்தி, "பீட்சா, "சூதுகவ்வும் வரிசையில் தெகிடியையும் தயாரிப்பாளர்களுக்கு வெற்றி படமாக்கியுள்ளதென்றால் மிகையல்ல!

ஆகமொத்தத்தில், ""தெகிடி - ""திகட்டலைடி! மிரட்டுதடி!!

'பிரம்மன்’ படத்துக் கதையைச் சொல்றேன். கவனமாக் கேளுங்க..!

''நீங்க, உங்களோடு சில நண்பர்கள், நட்புக்காகத் தியாகங்கள் பண்றீங்க...'' - இப்படிக் கதை சொன்னாலே சசிகுமார் ஓகே சொல்லிவிடுவார். அவருக்கு ஓகே. நமக்கு? 'பிரம்மன்’ படத்துக் கதையைச் சொல்றேன். கவனமாக் கேளுங்க!
 கோவையில் 'மாடர்ன் தியேட்டர்’னு ஒரு பாடாவதி தியேட்டரை லீஸுக்கு எடுத்துப் படம் ஓட்டுகிறார் சசிகுமார். அவருக்கு ஒரு நண்பன் இருக்கணுமே. 'நண்பேன்டா’ சந்தானம். ஓட்டுவது எல்லாம் செகண்ட் ரிலீஸ் படங்கள் என்பதால் கூட்டமே வருவது இல்லை. எல்லாப் படங்களையும் போல அப்பா ஞானசம்பந்தன் 'உதாவக்கரை’ என்று மகனைத் திட்டுகிறார். தியேட்டருக்கு கமர்ஷியல் டாக்ஸ் கட்டாததால் கெடு விதித்து, நோட்டீஸும் ஒட்டுகிறார்கள். 

ஒரு கட்டத்தில் காதலியை மணக்க வேண்டும் என்றால், இந்தப் பாடாவதி தியேட்டரைத் தலைமுழுகிவிட்டு வேறு ஏதாவது உருப்படியான வேலை பார்க்க வேண்டும் என்ற நிர்பந்தம். ஆனாலும் தியேட்டரைக் கைவிட மறுக்கிறார் சசிகுமார். உருப்படவே மாட்டேன் என்று அவர் தலைகீழாய்த் தண்ணி குடிக்கிறார். ஏன்? இங்கே தொடங்குது ட்விஸ்ட். அதுக்கப்புறம் படத்தோட இரண்டாம் பாதி முழுக்க ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்டுகள்.

முதல் ட்விஸ்ட் சந்தானத்தைப் போலவே சின்ன வயதில் சசிகுமாருக்கு இன்னொரு நண்பன் இருக்கிறார். இரண்டு பேருக்கும் அப்படி ஒரு சினிமா தாகம். கீழே கிடக்கும் ஃபிலிம் துண்டுகளை எடுத்து, அவர்களே படம் ஓட்டிப் பார்க்கிறார்கள். ஸ்கூலை கட் அடித்துவிட்டுப் படம் பார்த்து வீட்டில் மாட்டுகிறார்கள். சசிகுமாரின் நண்பன் மதன்குமாரின் கலை தாகத்தைப் புரிந்துகொண்ட அவரது அப்பா, ''சசிகுமாரிடம் பேசக் கூடாது'' என்று சத்தியம் வாங்கிவிட்டுச் சொல்கிறார், ''நீ இந்த ஊரில் இருந்தா டைரக்டர் ஆக முடியாது. டவுன் ஸ்கூலில் படிச்சாதான் டைரக்டர் ஆக முடியும்'' என்று. (அதுக்குள்ளே முறைச்சா எப்படி?). அதேபோல் வளர்ந்து தெலுங்கில் மூணு ஹிட் கொடுத்து பெரிய டைரக்டர் ஆகிவிடுகிறார் நண்பன் மதன்குமார். ஐந்து லட்சம் கமர்ஷியல் டாக்ஸ் கட்டினால்தான் தியேட்டரை மீட்க முடியும் என்ற நிலையில் சின்ன வயசு ஃப்ளாஷ்பேக் கொசுவத்தியை சந்தானத்திடம் பற்றவைக்கும் சசிகுமார், அதே கொசுவத்தியை நண்பன் மதன்குமாரிடம் பற்றவைத்து ஐந்து லட்சம் வாங்கி வர, சென்னைக்கு பஸ் ஏறுகிறார்.

சென்னையில் டைரக்டர் மதன்குமாரின் அட்ரஸை சூரியிடம் விசாரித்துத் தப்பாக தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷைச் சந்திக்கிறார். அங்கே புதிய இயக்குநர்களிடம் கதை கேட்கும் ஜெயப்பிரகாஷ், சசிகுமார், மதன்குமாரின் அசிஸ்டென்ட் என்று அவராகவே நினைத்து, சசி சொன்ன நட்புக் கதையையும் சினிமாக் கதை என்று நினைத்து ஐந்து லட்சம் அட்வான்ஸ் கொடுத்து (அதே ஐந்து லட்சம்) ''இந்தக் கதையைப் படமாப் பண்ணிடுங்க'' என்கிறார். உள்ளே உண்மையைச் சொல்லாமல், வெளியே வந்து ஃபீல் ஆகும் சசிகுமாரிடம், ''கவலைப்படாதே''னு சொல்லி, சினிமாவைக் கற்றுக்கொள்ள சில படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராகச் சேர்த்துவிடுகிறார் சூரி. ஒரே நேரத்தில் டைரக்டர், அசிஸ்டென்ட் டைரக்டர் என்று சவாரி செய்யும் சசிகுமாரைச் சந்தித்தேவிடுகிறார் நண்பன் டைரக்டர்.


''ஏன் என் அசிஸ்டென்ட்னு பொய் சொன்னே?'' என்று கேட்பவரிடம், ''நான் உங்க ரசிகன்'' என்று சமாளிக்கிறார் சசிகுமார். ''உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே?'' என்று சூரி கேட்க, ''நண்பனாத் தேடி வரும்போதுதான் உண்மை சொல்லணும்'' என்று தத்துவம் நம்பர் 2001-ஐ உதிர்க்கிறார் சசி. ஆனால் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளருக்கே உண்மை தெரிய, ''உங்க கதையைப் படமா எடுத்தா கண்டிப்பா 100 நாள் ஓடும். (நோ, நோ அப்படில்லாம் முறைக்கக் கூடாது). ஆனா சினிமா அனுபவம் இல்லாததால் கதையை என்கிட்ட வித்துக் காசு வாங்கிக்குங்க'' என்று ஜெயப்பிரகாஷ் சொல்ல மறுக்கிறார் சசிகுமார். அதுக்கப்புறம் நண்பன் டைரக்டரே சசிகுமாரைச் சந்தித்து, ''தமிழில் முதல் படம் பண்ணப்போறேன். என்கிட்ட கதை இல்லை'' என்று கேட்கிறார். (எங்க 'ஜெயம்’ ராஜாவெல்லாம் கைவசம் கதையே இல்லைன்னாலும் தெலுங்குப் படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுப்பாப்ல. தெலுங்குல மூணு ஹிட் கொடுத்த மதன்குமாருக்கு கதைப் பஞ்சம். ஹூம்)

 ''நீங்க கேட்டாக் கட்டை விரலையே காணிக்கையாத் தருவேன். கதையைத் தர மாட்டேனா?'' என்று தத்துவம் நம்பர் 3001-ஐ உதிர்த்துவிட்டு, தயாரிப்பாளரிடம் காசும் வாங்க மறுத்து, மீண்டும் கோயம்புத்தூருக்கே வருகிறார் சசிகுமார்.

அங்கே வந்து பார்த்தால், சசிகுமார் கோயிலா நினைச்சுக்கிட்டிருந்த தியேட்டரில் வளைச்சு வளைச்சு பிட்டுப் படங்கள் ஓட்டுகிறார் சந்தானம். ஏற்கெனவே தயாரிப்பாளரிடம் வாங்கிய ஐந்து லட்சத்தை ஊருக்கு அனுப்பியும் ஏன் சந்தானம் கஜகஜா படம் ஓட்டுகிறார்? அதுக்கும் ஒரு காரணம் இருக்குல்ல? சசிகுமார் டைரக்டர் ஆகிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டு ஞானசம்பந்தனுக்கு சந்தோஷத்திலேயே ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாம். 

இவ்வளவு ட்விஸ்ட் வெச்சா, வராம என்னங்க பண்ணும்?) ஞானசம்பந்தனுக்கு சிகிச்சை பார்த்ததில் ஐந்து லட்சம் அவுட் ஆக, அப்புறம் என்ன, ஷகிலாதான், சல்சா படம்தான். டயர்ட் ஆகாதீங்க பாஸ், இன்னொரு முக்கியமான ட்விஸ்ட். சசிகுமாரின் காதல் பெண்ணுக்கும் நண்பன் டைரக்டருக்கும் திருமணம் வேறு நிச்சயமாகிவிடுகிறது. தியாகி பென்ஷன் வாங்காமலே நட்புக்காகப் பல தியாகங்களைச் செய்யும் சசிகுமார் இதையும் ஏற்றுக்கொள்கிறார். திடீரென்று கமர்ஷியல் டாக்ஸ் அலுவலகத்தில் இருந்து சசிகுமாருக்கு அழைப்பு. ''நீங்க மக்களுக்குச் செஞ்ச சேவையைப் பாராட்டி அரசாங்கமே டாக்ஸைத் தள்ளுபடி செஞ்சுடுச்சு'' என்கிறார் அதிகாரி. (நல்லாக் கவனிங்க மக்களே! தியேட்டரை மூடுறதுக்கு முன்னால ஓடினது எல்லாமே பிட்டுப் படங்கள்...சேவை!)

அப்புறம் என்ன, தியேட்டரின் நூலாம்படையை எல்லாம் நீக்கிவிட்டு, யாருமே வராத தியேட்டரில் தனியாகப் படம் ஓட்டி ஃபீல் ஆகிறார் சசிகுமார். அதே நேரம் நண்பன் டைரக்டருக்கும் காதலிக்கும் திருமண ரிசப்ஷன். அப்புறம் உண்மை தெரிஞ்ச டைரக்டர் சசிகுமாரைப் பார்க்க வந்து...  
ஹலோ பாஸ், ஏன் படிச்சிட்டிருக்கும்போதே பாதியில் எந்திரிச்சு தம் அடிக்கப் போயிட்டீங்க? நாங்கல்லாம் பாவம் இல்லையா? 'அப்போ படத்தில் வித்தியாசமே இல்லையா?’ங்கிறீங்களா? ஏங்க இல்லை? இதுநாள் வரைக்கும் கரட்டுமேட்டில் கைலியோட சுத்திட்டிருந்த சசிகுமார் முதன்முறையா ஃபாரீன் டூயட்டெல்லாம் ஆடறாரே! மறுபடி மறுபடி முறைக்காதீங்க பாஸ். ஏற்கெனவே நொந்துபோயிருக்கோம்.

ஆனா ஒண்ணுங்க, எனக்கெல்லாம் இந்தப் படத்தில் ரெண்டே ரெண்டு கோரிக்கைதாங்க.

கோரிக்கை நம்பர் ஒன் : படத்துக்கு 'பிரம்மன்’னு டைட்டில் வெச்சதுக்குப் பதிலா 'எமன்’னு வெச்சிருக்கலாம். மரண பயத்தைக் காட்டிட்டீங்களேய்யா?
கோரிக்கை நம்பர் டூ : படம் ஒரு வழியாக முடிந்து அப்பாடா என்று எழும் நேரத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் ஒரு பாடல் ஒலிக்கிறது, ''ஓடு ஓடு ஓடு...'' என்று. இதை ஓப்பனிங் சாங்காப் போட்டிருந்தா அப்பவே அப்படியே ஓடியிருப்போமே டி.எஸ்.பி. சார்!


வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது..?



யார் என்ன சொன்னாலும் நாட்டில் இருப்பவர்கள் இன்னும் வெளிநாடு வர துடிப்பதுக்கு எது காரணம்?
எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம்
பணம்.சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை.

வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.

•பிறந்த நாட்டை விட்டு பிரிந்து உறவுகளை விட்டுவிட்டு தனியனாய் உரிமைகள் அற்று சிதறி கற்பனை வாழ்வில் மட்டுமே கனவுகளில் லயித்து நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது எங்கள் வாழ்க்கை..!

•எனக்கொரு கனவு கடனில் இருக்கும் வீட்டை என் காலத்திலாவது கட்டி மீட்டிட வேண்டும்..!

•நண்பனுக்கொரு கனவு தன்னோடு கஷ்டம் போகட்டும் தன் தமையன்களுக்காவது நல்ல படிப்பை நல்கிட வேண்டும்..!

•அறைத் தோழன்னுக்கோர் கனவு அப்பாவின் ஆப்பரேசனுக்கு பணம் சேர்த்து மீளாத் துயரில் இருக்கும் குடும்பத்தை மீட்டிட வேண்டும்..!

•தோழியின் கனவு தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும் தன் தங்கைகளுக்கு திருமணம் செய்து பார்த்து மகிழ்ந்திட வேண்டும்..!

•இப்படியாய் நாங்கள் கனவுகள் வெவ்வேறு பணம் ஒன்றே பிரதானமாய் எல்லோரும் வெளிநாட்டில்..!

•காய்ச்சல் வந்ததென்றால் கஞ்சி கொடுக்க தாயில்லை.
அன்பை பகிர்வதற்கு அருகில் என் தங்கை இல்லை.
அதிகாரம் செலுத்திட அருகாமையில் அப்பா இல்லை.
சோகம் சுமந்தோமேன்றால் ஆற்றுவதற்கு ஆளில்லை.
சொல்லொண்ணா துயரில் நாங்களும் அனாதைகள்தான். நாடுகடந்து வாழ்வதால் நாங்களும் அகதிகள்தான்..!

மொபைலின் முழு வரலாறு இதுதாங்க...!



இன்றைக்கு மொபைல் என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் அனைவரும் லேன்ட்லைன் போனில் ஹலோ ஹலோனு கத்திக் கொண்டு இருந்திருப்போம்.

மேலும் லேன்ட்லைன் போனின் பில்லை பார்த்து மயக்கம் அடைந்தவர்கள் ஏராளம் உண்டு தமிழ்நாட்டில்.

அவையனைத்தையும் இன்று உடைத்து லேன்ட்லைன் என்றால் என்ன என்று கேட்கப் போகும் தலைமுறை வர இன்னும் தூரமில்லை எனலாம் இதற்கு முதற்காரணம் மொபைல் தான்.

இன்று ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920
இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது

1947
ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1955
காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1969
பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973
மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979
ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983
டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984
விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989
மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990
2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991
அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992
மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996
மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

1997
எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000
இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001
வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002
டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது.

2004
மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006
மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007
ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2008
டச் ஸ்கிரின் மொபைல் வந்து கலக்கியது.

2010
ஆண்ட்ராய்டு மொபைல் உலகை தனதாக்கியது.

2014
எதிர்கால தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டு மொபைல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

''ப்பா...'' இப்போதான் சினிமாவைப் புரிஞ்சுக்கிறேன்..!

''ப்பா...'' - இந்த இரண்டெழுத்து வசனம் மூலம் பிரபலமானவர் காயத்ரி. இது கடலை வித் காயத்ரி...

''உங்க சினிமா பிரவேசம் பற்றிச் சொல்லுங்க''

''ப்ளஸ் டூ படிச்சுட்டு இருக்கும்போது 'சில்லுனு ஒரு காதல்’ படத்தோட டைரக்டர் கிருஷ்ணா சாரை மீட் பண்ணினேன். 'ஏன் இப்படி மயக்கினாய்?’னு அவருடைய அடுத்த படத்துக்கான நாயகியைத் தேடிட்டு இருந்தவருக்கு, என் முகம் பிடிச்சிருந்தது... நடிச்சேன். அந்தப் படத்தோட இசை வெளியீட்டு விழா நடந்தும் படம் மட்டும் ரிலீஸ் ஆகவே இல்லை. அடுத்து கிடைச்ச வாய்ப்புதான் '18 வயசு’.''

''கொஞ்ச நேரம் வந்துபோகிற கேரக்டர்லேயே பெரும்பாலும் நடிச்சிருக்கீங்க... காரணம்?''

'''நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துல 10 நிமிஷம்தான் வருவேன். ஆனாலும் ஆடியன்ஸ் மனசுல கச்சிதமா நிக்கிறேனே? அதுபோதும். ஏன்னா, நல்ல கதை இருந்தா மட்டுமே படம் பார்க்க வருவாங்க. மொக்கையான கதையில் முழுசா வர்றதைவிட, நல்ல கதையில் நாலு நிமிஷம் வந்தா போதும்... என்ன நான் சொல்றது?''


''அடுத்தடுத்து விஜய் சேதுபதியோடவே ஜோடியா நடிக்கிறதுக்கு ஸ்பெஷல் காரணம் ஏதாவது....?''

''விஜய் சேதுபதியை நான் முதல் முதல்ல பார்த்ததே 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ஷூட்டிங்லதான். டைரக்டர் பாலாஜி கொடுத்த வாய்ப்பு அது. அடுத்து 'ரம்மி’யில் நடிச்சேன். இது அந்தப் படத்தோட கேமராமேன் மூலமா கிடைச்ச வாய்ப்பு. இப்போ நடிக்கிற 'மெல்லிசை’ படத்தோட இயக்குநர், அவருடைய முதல் படத்துக்கே என்னைத்தான் ஹீரோயினா செலக்ட் பண்ணினார். 

சில காரணங்களால் அந்தப் படம் நின்னுபோக, 'மெல்லிசை’க்கு என்னை ஹீரோயின் ஆக்கிட்டார். இப்படித்தான் எனக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைச்சது. ஆனா, விஜய் சேதுபதிதான் எனக்கு சான்ஸ் வாங்கிக் கொடுக்கிறதா எழுதுகிற கிசுகிசுகளுக்குப் பதில் சொல்ல விரும்பலை. விஜய் சேதுபதி, தன்னுடன் நடிக்கிற யார் நடிப்புப் பிடிச்சிருந்தாலும் ரொம்பவே என்கரேஜ் பண்ணுவார். அவ்வளவுதான்.''

''சூர்யா மட்டும்தான் உங்களுக்குப் பிடிச்ச நடிகராமே?''

''இந்தத் தகவலை விக்கிபீடியாவுல யாரு எழுதினதுனுதாங்க நான் தேடிட்டு இருக்கேன். விஜய், அஜித், சூர்யா, மாதவன்னு என் ஃபேவரைட் ஸ்டார்ஸோட லிஸ்ட் ரொம்ப நீளம்.''

''உங்க மேக்கப்பைப் பார்த்து 'ப்பா... யார்றா இந்தப் பொண்ணு? பேய் மாதிரி இருக்கா?’னு நேர்ல யாராவது கேட்டிருக்காங்களா?''

''ஏன் இப்படி? நான் அதிகமா மேக்கப் போடவே மாட்டேன். ஆனாலும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துல அந்த சீன்ல நடிச்சதுக்கு அப்புறம் ரொம்ப கலாய்க்க ஆரம்பிச்சுடுவாங்களோனு பயம் வந்துடுச்சு. அந்தப் படத்தோட பிரஸ்மீட்டுக்குப் போகும்போதுகூட சுத்தமா மேக்கப் இல்லாமதான் போனேன். இப்போ யாராவது கலாய்ச்சாக்கூட, 'படத்தோட டயலாக்தான் பேசுறாங்க... நம்ம மேக்கப்பைக் கலாய்க்கலை’னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்.''

''நடிகை ஆவதற்கு முன்... ஆனதற்குப் பின்... குறிப்பு''

'' வீட்டுக்கு ஒரே பொண்ணு. அப்பா, அம்மா, பெரியம்மானு எல்லோருக்குமே நான் செல்லம். ஆரம்பத்தில் சினிமாவும் அப்படித்தான். நடிகையா நடிச்ச முதல் படம் ரிலீஸ் ஆகலைனாலும் அந்தப் படத்துல எனக்கு கிடைச்சதெல்லாமே 'ஸ்வீட் மெமரீஸ்’ மட்டுமே. 'சூர்யாவை இயக்கியவர் நம்மை நடிகை ஆக்குறாருனா, நம்ம ரேஞ்சே வேற’னு சின்னப்புள்ளத்தனமா யோசிச்சுட்டு, 'இனிமே பெரிய நடிகர்களோட படங்கள்ல மட்டும்தான் நடிப்பேன்’னு பிரஸ்மீட் வைக்கணும்னு எல்லாம் பிளான் பண்ணிட்டேன். ஆனா, முழுக்க சினிமாவில் வந்ததுக்கு அப்புறம்தான் 'எதிர்பார்த்தது எல்லாமே இங்கே நடக்காது’னு தெரிஞ்சது. என்னென்ன நினைச்சுக்கிட்டு வந்தேனோ, அதெல்லாம் உடைஞ்சுக்கிட்டே வந்துச்சு. சிம்பிளா சொல்லணும்னா, 'சினிமாவில் நடக்கிற எதையுமே முன்னாடியே பிளான் பண்ண முடியாது’னு தெரிஞ்சுக்கிட்டேன்.''

''படிக்கிற வயசுல பசங்க ஏகப்பட்ட 'ஐ லவ் யூ’ சொல்லியிருப்பாங்களே?''


''அதெல்லாம் கிராஸ் பண்ணாம வர முடியுமா? ஒருத்தன் என்கிட்ட வந்து 'ஐ லவ் யூ’ சொல்லிட்டு, 'நாலு மணிக்கு நான் பாலத்துல நிற்பேன்... நீ வந்து, என்னைப் பார்த்து ஒகே சொல்லலைனா, குதிச்சு செத்துடுவேன்’னு சொல்லிட்டுப் போனான். நானும் அவன் சொன்ன டைமை விட கொஞ்சம் லேட்டா போய் 'மணி 4.30 ஆகிடுச்சு... இன்னும் குதிக்கலையா? நீ குதிக்கிறதைப் பார்க்கிறதுக்குதான் நான் வந்தேன்’னு சொல்லிட்டுக் கௌம்பிட்டேன். என்ன பண்றதுனு தெரியாம அவனே திரும்பிப் போயிட்டான்.  எந்த பதில் கிடைச்சாலும் பரவாயில்லைனு தைரியமா வந்து, 'எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?’னு கேட்கிறவங்களைத்தான் எனக்குப் பிடிக்கும். அதே சமயம், 'எனக்கு உன்னைப் பிடிக்கலை’னு சொன்னாலும் அதைப் புரிஞ்சுக்கிட்டுத் திரும்பிப் போயிடணும்.''

அம்மா மூவி ரிலீஸ் கமிட்டி ஆரம்பிங்கப்போகிறார்கள்...!

லொடலொடவெனப் பேசியே ரசிக்க, சிரிக்க வைப்பவர் 'நண்டு’ ஜெகன். சின்னத்திரை டு  சினிமாவுக்கு என்ட்ரி ஆகி, இப்போது இரண்டிலும் சவாரி செய்யும் அவரிடம் கொஞ்சம் ஜாலி அரட்டை.

''காமெடியனா பெரிய லெவலுக்கு வருவீங்கனு எதிர்பார்த்தா... ஆளையே காணோமே பாஸ்?''

''என்ன பண்றது என் கையில எதுவும் இல்லையே பிரதர்? ஒவ்வொரு படத்துலேயும் ஒவ்வொரு விதமாத்தான் நடிச்சேன். வாய்ப்பு கொடுக்க வேண்டியது டைரக்டர்ஸ்தான். ரோட்டுக் கடையில ரெண்டு ரூபாய்க்கு கிடைக்கிற இட்லியை, லைட்டிங் செட்டோட வெயிட் பண்ணவெச்சு, பெரிய கடையில் ஆர்டர் பண்ணிச் சாப்பிட்டா அதுக்கு பில் ஜாஸ்தி பிரதர். அதனால, நம்ம டைரக்டர்ஸும் வெட்டியா வீட்டில் உட்கார்ந்திருக்கிற என்னை மாதிரி ஆட்களைக் கூப்பிடாம, எப்பவும் பிஸியா இருக்கிறவங்களைக் கூப்பிடுறாங்களோ என்னவோ? பட் ஒன் திங்... எங்களுக்கும் காலம் வரும்.''

''கனெக்ஷன்’னு புரோகிராம் பண்றது ஒகே... இதுவரைக்கும் நீங்க ட்ரை பண்ண கனெக்ஷன் கணக்குகளைச் சொல்லுங்க...''

''இந்த ஷோவை இவ்வளவு பிரமாதமாப் பண்றேன்னா, அதுக்குக் காரணமே, காலம் பூராவும் பல கனெக்ஷனுக்கு ட்ரை பண்ணி, எதுவுமே எரியாம புஸ் ஆனதினால்தான். சோதனையில் பல முயற்சிகள் தாண்டி வந்தவனுக்கு, ஹிட் ஃபார்முலா எதுனு ஈஸியா தெரியும்னு சொல்வாங்க. நமக்கு கடைசி வரைக்கும் ஹிட் ஃபார்முலாவும் தெரியலை, ஏன் ஃபெய்லியர் ஆகுதுனும் புரியலை. ஸோ... எனக்கு செட் ப்ளஸ் ஹிட் ஆன ஒரே கனெக்ஷன், என் மனைவி வான்மதி மட்டும்தான்.''


''கேம் ஷோவுல போட்டோவைக் காட்டி, 'என்ன தெரிகிறது?’னு மொக்கை போடுறீங்கல்ல... ஒரு கடற்கரை, அதுக்குப் பக்கத்துல ஒரு துப்பாக்கி. இதில் இருந்து என்ன தெரியுது?''

''கடற்கரையில் விற்கிற மட்டமான, பழைய சுண்டலை வாங்கிச் சாப்பிட்டா, இந்தத் துப்பாக்கியால் சுட்டுக்கிட்டு சாகணும்னு தோணும். தவிர, அங்கே மசாலா பூரி, பேல் பூரி, மீன் வறுவல் வறுத்துக் கொடுப்பாங்க பாருங்க, சத்தியமா சொல்றேன். அதையெல்லாம் சாப்பிடுறதைவிட துப்பாக்கியால் சாகிறது எவ்வளவோ பெஸ்ட். ஆமா, இந்தக் கேள்வியில் இருக்கிற குறியீடு என்ன?''

''ஓவராப் பேசிக்கிட்டே இருக்கிற உங்களை நம்ம முதல்வர்கிட்ட கொண்டுபோய் நிப்பாட்டினா, என்ன பேசுவீங்க?''

''நிகழ்ச்சிகள்லதாங்க நான் இவ்ளோ பேசுறேன். வீட்ல நான் ரொம்ப சைலன்ட். கல்யாணத்துக்கு முன்னாடி தனி ரூம்லதான் தங்கியிருந்தேன். அப்போவெல்லாம் போன் வந்தாக்கூட எடுத்துப் பேச மாட்டேன்னா பார்த்துக்கோங்க. அதனால, நம்ம முதல்வரைப் பார்த்தா, பவ்யமா ஒரு வணக்கம் வெச்சுட்டு, வழக்கம்போல எல்லோரும் சொல்ற மாதிரி 'நான் உங்களுடைய தீவிர ரசிகன்’னு சொல்லிட்டு, அப்படியே எங்க ஏரியாவில் 'அம்மா உணவகம் திறந்ததுக்கு ஒரு தாங்க்ஸும் சொல்லிட்டு வந்துடுவேன். ஏன்னா அம்மா உணவகத்தோட ரெகுலர் கஸ்டமர் நான்.''

''அப்படின்னா நரேந்திரமோடியோட 'நமோ டீ’யையும் குடிச் சிருப்பீங்களே?''

''சென்னையில் எங்கே டீ சாப்பிட்டாலும் ரொம்ம்ம்ப சுமாரா இருக்கும். இவர் வெளியூர்க்காரர் வேற. எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க. முதல் ரெண்டு நாளைக்கு நல்லாக் கொடுத்திருப்பாங்க. அதை மிஸ் பண்ணிட்டேன். தவிர, சென்னையில் ஒரு இடத்தில்தானே திறந்திருக்காங்க. அதனால, டேஸ்ட் பண்ண முடியலை.''


'' 'அம்மா உணவகம்’, 'அம்மா திரையரங்கம்’, 'அம்மா குடிநீர்’ மாதிரி இன்னும் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரலாம்?''

''அம்மா திரையரங்கம்’கூட அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல 'அம்மா மூவி ரிலீஸ் கமிட்டி’னு ஒண்ணு ஆரம்பிக்கணுங்க. நான் நடிச்ச பல படங்களை ரிலீஸ் பண்ணாமலே வெச்சிருக்காங்க. 'அம்மா’வே படத்தை ரிலீஸ் பண்றாங்கனா, தியேட்டர் கிடைக்காமலா போயிடும்?''

''எதிர்காலத் திட்டம்?''


''இந்தக் கேள்விக்காகத்தாங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். எழுதிக்கோங்க. 'நான்தான் தமிழ் சினிமாவின் வருங்கால நாகேஷ்’ இதை காமெடியா சொல்லலைங்க, உண்மையிலேயே சீரியஸா சொல்றேன். ஏன்னா, வில்லன், காமெடி, சென்டிமென்ட்னு எல்லா ஏரியாவிலேயும் கலக்குறவர் நாகேஷ் சார். அவருக்கு அப்புறம், தமிழ் சினிமாவில் அந்த இடம் காலியாவே இருக்கு. அதை நான்தான் நிரப்பணும்னு ஆசைப்படுறேன்!''


வசனங்களால் பிரபலமான சிவாஜி, பேசாமலே ஜெயித்த காலங்கள்..!



பாகவதரின் ‘அம்பிகாபதி’, 1937ல் வெளியாகி சக்கைப் போடு போட்டது. அந்தப் படம் மீண்டும் 1957ல் ரீமேக் ஆனது. பாகவதர் வேடத்தில் நடித்தது சிவாஜி. அவருக்கு பானுமதி ஜோடி. கம்பராக எம்.கே.ராதா நடித்திருந்தார். என்.எஸ்.கே., மதுரம், நாகைய்யா, ராஜ சுலோச்சனா நடித்தனர். பழைய படத்தில் பாடல்கள் மிகப் பிரபலம். அதனால் இப்படத்திலும் பாடல்களுக்கு தனி முக்கியத்துவம் தரப்பட்டது. அதே நேரம், பழைய பாடல்கள் எதையும் இதில் பயன்படுத்தவில்லை.

எல்லாமே புது மெட்டுகள்தான். ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார். எதிர்பார்த்தபடி பாடல்கள் சூப்பராக வந்தது. எல்லா பாடல்களுமே ஹிட். பாடல்களை கண்ணதாசன், கிருஷ்ணமூர்த்தி, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தஞ்சை ராமைய்ய தாஸ், ஆதிமூலம், நாடக நடிகர் கே.டி.சந்தானம் என பலர் எழுதினர். படத்தில் பாடல் காட்சிகள் மட்டும் கலரில் வெளியானது குறிப்ப¤டத்தக்கது. ஏ.எல்.சீனிவாசன், அருணாச்சலம் தயாரித்தனர். வசனம் மற்றும் இயக்கம் பா.ந¦லகண்டன். படம் சரியாக போகவில்லை.

பழைய ‘அலாவுதீனும் அற்புத வ¤ளக்கும்’ படமும் ரீமேக் ஆனது, தமிழ், தெலுங்கு மொழிகளில். இது கலர் படம். நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி, ராஜசுலோச்சனா, ஜி.சகுந்தலா, பாலைய்யா, ரங்காராவ், தங்கவேலு நடித்தனர். ராஜேஸ்வரராவ் இசையமைத்தார். எம்.எல்.பதி தயாரிப்பில் ரகுநாத் இயக்கியிருந்தார். சுமாராக போனது.

நாகேஸ்வரராவ், சாவித்திரி சேர்ந்து தமிழ், தெலுங்கில் நடித்த படம் ‘எங்க வீட்டு மகாலட்சுமி’. மதுசூதனராவ் தயாரித்தார். ஏ.சுப்பாராவ் இயக்கம். சரத் சந்திர சட்டர்ஜியின் நாவலை தழுவி உருவான படம். ஸ்ரீதர், வசனம். இசை எம்.வேணு. கண்ணாம்பா, சுந்தரிபாய், ராஜசுலோச்சனா, இ.வி.சரோஜா, அங்கமுத்து, ரங்காராவ், நம்பியார், சந்திரபாபு, தங்கவேலு நடித்தனர். படம் நன்றாக ஓடியது.

ஜூபிடரின் தயாரிப்பு ‘கற்புக்கரசி’. ஜெமினி, சாவித்திரி, நம்பியார், தங்கவேலு, ஆர்.பாலசுப்ரமணியம், ஜி.வரலட்சுமி, இ.வி.சரோஜா நடித்தனர்.
ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். கதை, சிவசுந்தரம். வசனம் ஏ.எஸ்.ஏ.சாமியுடன் அரு.ராமநாதன் எழுதியிருந்தார்.

இசை, ஜி.ராமநாதன். படம் ஹிட். உமா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது ‘சக்ரவர்த்தி திருமகன்’. எம்.ஜி.ஆர்., அஞ்சலி தேவி ஜோடி. வீரப்பா, என்.எஸ்.கே., மதுரம், எஸ்.வரலட்சுமி, லட்சுமிபிரபா, டி.பி.முத்துலட்சுமி நடித்தனர். ஆர்.எம்.ராமநாதன் தயாரித்தார். பா.நீலகண்டன் டைரக்ஷன். நாடக நடிகரான பி.ஏ.குமார், கதை. வசனம், இளங்கோவன். இசை, ஜி.ராமநாதன். எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கே.யின் கேள்வி, பதில் போன்ற போட்டி பாடல் ஒன்று இருக்கும். அது பிரபலமானது. கிளவுன் சுந்தரம் என்பவர் அப்பாடலை எழுதியிருந்தார். வெற்றிப் படம்.

ஒய்ஜிபியின் நாடகமான ‘சமய சஞ்சீவி’, படமானது. முழு நீள காமெடி கதை. கதை, வசனம் எழுதி நாடகத்தில் நடித்த பட்டு, இதில் ஹீரோ. நாடகங்களில் அவர் பிரபலம் என்பதால் இதில் அவரையே நடிக்க வைத்தனர். அவருக்கு ஜோடி ஜெயலலிதாவின் சித்தி வித்யாவதி. ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவும் நடித்திருந்தார்.

டி.ஆர்.ராமச்சந்திரன், நம்பியார், சாரங்கபாணி, சிவதாணு, எம்.என்.ராஜம் நடித்தனர். வி.எஸ்.ராகவன் இயக்கினார். இசை, ஜி.ராமநாதன். பட்டுவை ஹீரோவாக மக்கள் ஏற்கவில்லை. படமும் ஓடவில்லை.

பி.ஆர்.பந்துலுவின் படம் ‘தங்கமலை ரகசியம்’. தமிழ், கன்னட மொழிகளில் உருவானது. தயாரித்து பந்துலு இயக்கினார். கதையை சின்ன அண்ணாமலை, மா.லட்சுமணன் எழுதினர். திரைக்கதை சித்ரா கிருஷ்ணசாமி. இசை, பி.ஜி.லிங்கப்பா. ஜி.கே.ராமு ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தில் இடம்பெறும் சில கலர் காட்ச¤களுக்கு மட்டும் சுப்பாராவ் ஒளிப்பதிவு செய்தார்.

சிவாஜி, டி.பி.ராஜகுமாரி, கண்ணாம்பா, நம்பியார், வீரப்பா, டி.ஆர்.ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்தனர். சரோஜா தேவி ஒரு பாடலுக்கு ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. வசனங்களால் பிரபலமான சிவாஜி, இந்த படத்தில் வசனமே பேச வில¢லை. காரணம், அவருக்கு வாய் பேசாதவர் வேடம். காட்டுவாசியாக காமெடி கலந்த வேடத்தில் நடித்து அசத்தினார். 100 நாட்களை கொண்டாடியது படம்.

தேவரின் குறுகிய கால தயாரிப்பு ‘நீலமலை திருடன்’. நீண்ட இடைவெளிக்குப் பின் ரஞ்சன் ஹீரோவாக நடித்தார். அவருக்கு அஞ்சலி தேவி ஜோடி. எம்.கே.ராதா, பாலைய்யா, தங்கவேலு, கண்ணாம்பா, இ.வி.சரோஜா நடித்தனர். எம்.ஏ.திருமுகம் இயக்கம். கே.வி.மகாதேவன் இசை. மார்க்கெட் இல்லாத போதும் ரஞ்சனை ஹீரோவாக மக்கள் ஏற்றனர்.

காரணம், படத்தின் கதை பிடித்துப்போனதுதான். படம் வெற்றி கண்டது. ஒளிப்பதிவாளர் பி.எஸ்.ரங்கா தயாரித்து இயக்கியிருந்த படம் ‘பக்த மார்க்கண்டேயா’. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவானது. புராண கதை படம¢. நீண்ட இடைவெளிக்குப் பின் புஷ்பவல்லி நடித்திருந்தார். ஹீரோயின் கிடையாது. முக்கிய வேடம்தான். நாகைய்யா, தங்கவேலுவும் இருந்தனர். சிறு பையனை சுற்றித்தான் கதை நகரும். அந்த வேடத்தில் ஜெமினி, புஷ்பவல்லி தம்பதியின் மகன் பாப்ஜ¤ நடித்திருந்தார். கதை மற்றும் வசனம் துரையூர் மூர்த்தி.

பணம் விஷயத்தில் இந்த 10 எச்சரிக்கைகள் தேவை..!



1. உங்கள் காசோலைகள் புத்தகத்தை உங்களுக்கு மட்டும் தெரிந்த பத்திரமான இடத்தில் வைத்திருங்கள்.

2. வங்கியில் உங்களில் தொடர்பு விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.

3. உங்கள் வங்கி மாதாந்திர அறிக்கையை கவனமாக பார்த்திடுங்கள் அல்லது உங்கள் பணப்பரிமாற்றங்களை ஆன்லைன் அல்லது டெலிபோன் பேங்கிங் மூலம் பரிசோதித்திடுங்கள்.

4. நீங்கள் செய்யாத ஏதாவது ஒரு பரிமாற்றம் நடந்திருப்பதாகத் தோன்றினால் உடனடியாக வங்கியை உஷார்ப்படுத்துங்கள். அவர்கள் அது குறித்து விசாரிப்பார்க்ள்.

5. நீங்கள் பணம் கொடுக்க வேண்டிய நபரிடம் நேரடியாக காசோலையை வழங்காத வரை அதில் கையெழுத்திடாதீர்கள்.

6. நீங்கள் தபாலில் காசோலை அனுப்புகிறீர்கள் என்றால் அதன் ஓரத்தில் இரண்டு கோடுகள் இடவோ அல்லது அக்கவுன்ட் பேயீ என்று குறிப்பிட மறக்காதீர்கள்.

7. நீங்கள் ஒரு காசோலையை ரத்து செய்கிறீர்கள் என்றால் அதன் எண்ணையும், எம்.ஐ.சி.ஆர். கோடையும் அடித்தபின் கிழித்து போட்டுவிடுங்கள்.

8. ஒரு வங்கியில் நீங்கள் உங்கள் கணக்கை முடிக்கிறீர்கள் என்றால் பயன்படுத்தாத காசோலை இதழ்களை அழித்துவிடுங்கள்.

9. ஆன்லைன் பேமண்ட் மின்னணு பணம் செலுத்தும் வழிகளை பயன்படுத்தலாமா என்று பாருங்கள். அப்போதும் உங்கள் பாஸ்வேர்டு விஷயத்தில் கவனமாக இருங்கள்.

10. உங்களுக்கு கிடைக்கும் காசோலை சரியானதாக தோன்றாவிட்டால் வேறு வழியில் பணம் செலுத்தக் கோருங்கள். 

வாகன(கார்) கடன் பெற வேண்டுமா..? இதப்படிங்க...!



இன்றைய நிலையில் சொந்த வாகன வசதி என்பது அத்தியாவசியமாகி விட்டது. அதிலும், மத்திய இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து கார்களின் விலை குறைந்துள்ளதால், பலருக்கும் கார் வாங்கும் ஆசை எழுந்திருக்கிறது.

குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் வெளியிடங்களுக்குச் சென்றுவர கஷ்டமாக இருக்கிறது, கார் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. கார் கனவை நிறைவேற்ற வங்கிகள் கடன் கொடுக்கின்றன. 'கார் வாங்கலியோ... கார்!' என்று கூவாத குறையாக கார் கடன் பெற அழைக்கிறார்கள்.

அதெல்லாம் சரி, ஆனால் கார் கடன் பெறுவதற்கு நமக்கு என்ன தகுதி வேண்டும் என்கிறீர்களா? இதோ விவரம்... கார் கடன் பெற விண்ணப்பிக்கும் நபருக்கு குறைந்தபட்சம் 21 வயதாகி இருக்க வேண்டும். பொதுவாக, கடன் முடியும்போது மாதச் சம்பளக்காரர்களுக்கு 60 வயதும், சுயதொழில் செய்பவர்களுக்கு 65 வயதும் இருப்பதுபோல் இருந்தால் தான் கடன் கிடைக்கும்.

குறிப்பிட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்து வர வேண்டும். பொதுவாக, மாதச் சம்பளக்காரர் எனில், தற்போதைய பணியில் குறைந்தபட்சம் ஓராண்டும், மொத்தத்தில் வேலைக்கு வந்து இரண்டு ஆண்டுகளும் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.

இது பொதுவான விதிமுறை. சில தனியார் வங்கிகளில் கார் கடன் பெற, தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். வேலைக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். மாதந்தோறும் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தொகை, ரூ.7,500 + கார் கடனுக்கான மாதத் தவணையாக இருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும்.

உதாரணமாக, ஒருவர் மாதாந்திரத் தவணையாக (ஈ.எம்.ஐ.) ரூ. 5,000 கட்ட வேண்டும் என்றால், அவருடைய சம்பளத்தில் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தொகை ரூ. 12,500 ஆக இருக்க வேண்டும். கடன் வாங்குபவரின் ஆண்டுச் சம்பளம் குறைந்தபட்சம் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருப்பது அவசியம்.

சுயதொழில் செய்பவர் எனில், ஆண்டு நிகர லாபம் குறைந்த பட்சம் 60 ஆயிரம் ரூபாய் (சிறிய காருக்கான கடன்), ஒரு லட்சம் ரூபாயாக (நடுத்தர மற்றும் சொகுசு கார் கடன்) இருக்க வேண்டும். சில நிறுவனங்கள், வீட்டில் அவசியம் தரைவழி தொலைபேசி இணைப்பு (லேண்ட் லைன்) இருக்க வேண்டும் என்பார்கள்.

கார் கடன் பெறுவதற்கு வருமானத்தை உயர்த்திக் காட்ட, கடன் வாங்குபவரின் சம்பளத்தோடு மனைவியின் வருமானத்தையும் சேர்த்துக் காட்டி, கூடுதல் தொகையைக் கடனாகப் பெற முடியும். பணிபுரியும் இடத்துக்கான சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால், சில நாட்களிலேயே கார் கடன் பெற்றுவிடலாம்.

வங்கியில் இக்கடனுக்கான பிரிவினர் துரிதமாகச் செயல்பட்டு கடனுக்கு ஆவன செய்துவிடுவார்கள். கார் வாங்குவது சரி, அதற்கு தொடர்ந்து பெட்ரோல், டீசல் போட்டுக் கட்டுப்படியாகுமா, பராமரிப்புச் செலவைச் சமாளிக்க முடியுமா, நகர்ப்புறம் என்றால், வீட்டில் வாகன நிறுத்த வசதி இருக்கிறதா என்றெல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு கார் கடனை நாடுங்கள்! 

பனிவிழும் மலர்வனம் - திரை விமர்சனம்..!



காதல்படம் என்கிற எண்ணத்தில் திரையரங்குக்குள் வருகிறவர்களை படம் தொடங்கி சிறிதுநேரம் வரைதான் நிறைவு செய்யமுடியும். அதன்பின்னர் படம் வேறுதிசையில் பயணிக்கிறது. புலிவரும்அடர்வனம் என்று பெயர் வைத்திருக்கலாம்.

முகநூல் மூலம் அறிமுகமாகி காதலிக்கத் தொடங்கும் நாயகன் அபிலாஷ் நாயகி சானியதாரா ஆகிய இருவருக்கும் முகலாயர்காலத்திலிருந்து இருக்கும் பெற்றோர்எதிர்ப்பு வந்துவிடுகிறது.

 நாயகனின் தந்தையாக நாசர் நடித்திருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு அவரைப்போலவே இருக்கிற அவருடைய தம்பி ஜவகர் நடித்திருக்கிறார். இவ்வளவுகாலம் தமிழ்த்திரையுலகம் இவரை எப்படி கண்டுகொள்ளாமல் விட்டது? நாயகன் அபிலாஷைப் பார்க்கப்பார்க்கத்தான் பிடிக்கும் போலிருக்கிறது.

இந்தப்படத்தில் பிடிக்கவில்லை. நாயகி தாழ்வில்லை. பொதுவாகக் காதலுக்குக் கண்ணில்லை என்று சொல்வார்கள், இந்தக்காதலுக்கு அறிவில்லை.

 படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் நாயகன், கல்லூரியில் படத்துக்கொண்டிருக்கும் நாயகி ஆகிய இருவருக்கும் வீட்டில் எதிர்ப்பு வந்ததும் எங்கு போவதென்றே தெரியாமல் முதலில் வருகிற பேருந்தில் ஏறிவிடலாம் என்று சொல்லி தேனிக்குப் பயணப்படுகிறார்கள்.

இத்தனைக்கும் தமிழ்த்திரையுலக வழக்கம் போல நாயகனுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

அங்கு போயும் கோயில் கோயிலாகப் போய் எங்களுக்குத் திருமணம் செய்துவையுங்கள் என்று கேட்கிறார்கள், படிப்பறிவு இல்லதவர்கள்கூடப் பயப்படும் வனத்துக்குள் கவலையின்றிச் சுற்றுகிறார்கள் போன்ற அபத்தங்களெல்லாம் படத்தில் இன்னொரு நாயகியாக இருக்கின்ற வர்ஷாஅஷ்வதியைச் சந்திக்கத்தான்.

தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களுக்குள்ளேயே பெண்களுக்குப் பாலியல்வன்முறைகள் நடக்கும்போது மேகமலை மாதிரி வனப்பகுதியில் நடக்காமலா இருக்கும்?

நாயகி சானியதாரா மீது வனத்துக்குள் திரியும் சில குற்றவாளிகளுக்கு ஆசை வருகிறது. அவர்களிடமிருந்து தப்ப காதலர்கள் போராடுகிற நேரத்தில் தன் சிறுவயது மகனோடு வந்து அவர்களைக் காப்பாற்றுகிறார் வர்ஷா.

அதன்பின்னர் மொத்தப்படமும் இயற்கைஎழில் சூழ்ந்த வனப்பகுதிக்குள்ளேயே நடக்கிறது. சந்திரனும் சூரியனும் கூட நுழையமுடியாதகாடு என்று பாட்டெழுதியிருக்கிறார் வைரமுத்து, அந்தவரிகளை சமதளத்தில் நின்றுபாடிக்கொண்டிருக்கிறார்கள் காதலர்கள்.

அந்தக்காதலர்கள் காட்டுக்குள் போனதும் கதைக்களம் காதலில் இருந்து விலகிப்போய் விடுகிறது. காதலர்களுக்கு கோழி, மீன் என்று நன்றாகச் சமைத்துப்போடுகிறார் வர்ஷா. பார்க்கும்போது நாக்கு ஊறுகிறது. வர்ஷாவின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கவர்கிறான்.

 பாவாஇலட்சுமணனைக் கிண்டல் செய்கிற மாதிரி மாரிமுக்கா என்று கத்துவது ரசிக்கவைக்கிறது. வனம் பற்றியும் விலங்குகள் பற்றியும் நல்ல கருத்துகளைச் சொல்கிறார்கள். காலகாலமாக விலங்குகள் போகும்பாதையில் நாம் வீடு கட்டிக்கொண்டுவிட்டால் அவை என்ன செய்யும்?

உட்பட சில வசனங்களில் இயற்கை மீது மனிதர்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் வன்முறைகளை எடுத்துச்சொல்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கூடியிருக்கிறது என்பதற்கு இந்தப்படமும் இதன் இயக்குநரும் சான்று.

காடு பற்றியும் அங்குள்ள வாழ்க்கை பற்றியும் வர்ஷா பேசுவதைக் கேட்கும்போது அவர் அங்கேயே பிறந்துவளர்ந்த மாதிரி தெரிகிறது. அப்படியே விட்டிருக்கலாம் கடைசிக்காட்சியில் அவரைப் பெருமைப்படுத்துகிறேன் என்று அதையும் உடைத்துவிடுகிறார்கள். அவரும் காதலுக்காக வீட்டைவிட்டு ஒடிவந்து அந்தக்காட்டில் வசிப்பவராம்.

வர்ஷாவின் சின்னவயது மகனுக்கு ஒரு விநோதமான நோயைச் சொல்லி அதற்கு மருத்துவம் செய்யப்பணம் புரட்டும் காட்சிகளை வைத்து நோகடிக்கிறார்கள். அந்தக்காட்டுக்குள் சீட்டுசேர்க்கிற ஒருவர் நேர்மையாகப் பணத்தைக் கொண்டுவந்துகொடுக்கிறார்.

வர்ஷா வசிக்கும் ஓட்டுவீட்டுக்குக் கடன் இருக்கிறது போன்ற வியப்புகளும் இருக்கின்றன. ஒருவழியாகப் பணத்தைச் சேர்த்துக்கொண்டு காட்டுவழியாகப் போனால் சீக்கிரம் போய்விடலாம் என்று அவர்கள் காட்டுக்குள் போனதும் படத்தில் விறுவிறுப்பும் படபடப்பும் ஒருசேரச் சூழ்ந்து கொள்கிறது. புலி நடமாடும் காட்சிகளை நன்றாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

புலி நன்றாக நடித்திருக்கிறது. அந்தக்காட்சிகளில் நமக்கு இருக்கும் பதட்டம்கூட புலியிடம் அகப்பட்டுக்கொண்டிருப்பவர்களிடம் தெரியவில்லை. பஞ்சுமெத்தையில் உட்கார்ந்திருப்பதைப்போல மரக்கிளையில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவ்வளவு நெருக்கடியான சூழலில் ஒரு குழந்தை நோயின் வலியில் துடிப்பது போல் காட்டி நம்முடைய கோபத்தைச் சம்பாதிக்கிறார் புதுஇயக்குநர் ஜேம்ஸ்டேவிட்.

தன் மகனின் உயிர் காக்க வர்ஷா எடுக்கும் முடிவு நெகிழவைக்கிறது. தன் குழந்தையை மட்டுமின்றி புலிக்குட்டியையும் அவர் காப்பாற்றுகிறார் என்று காட்டியிருப்பது தாய்மையின் உச்சம். இவ்வளவும் அந்தக்காதலர்கள் தங்கள் பெற்றோர் பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ளத்தான் உதவுகிறது எனும்போது, இதற்காகவா இத்தனை துயரம் என்ற எண்ணம் வருகிறது.

“வல்லினம்” - சினிமா விமர்சனம்



நடிகர்: நகுல்
நடிகை: மிருதுலா பாஸ்கர்
இயக்குனர்: அறிவழகன்
இசை: தமன்
ஓளிப்பதிவு: பாஸ்கர்
தயாரிப்பு: ஆஸ்கர் பிலிம்ஸ்

சிலர் சுயநலத்துக்காக படம் எடுப்பார்கள் இன்னும் சில பேர் வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்று தன்னை தக்கவைத்து கொல்வதற்காக படம் எடுப்பார்கள்.

ஆனால் ஒரு சிலர் மட்டுமே பொதுநலத்துக்காகவும், எதோ விதத்தில் இந்த படைப்பு உலகில் ஒரு மாற்றத்தை தர வேண்டும் என்பதற்காக எடுப்பார்கள்.

அந்த வரிசையில், சமூகத்தில் உள்ள சில சுயநலக்காரர்களின் பண போதையில், விளையாட்டு எவ்வாறு வணிக ரீதியாக மாறுகிறது என்பதையும் சமூகத்தின் பார்வையில் இன்று வரை விளையாட்டு வீரர்கள் ஒரு பணம் கொட்டும் வியாபாரமாக தான் கருதப்படுகிறார்கள் என்ற கதைக்கருவினை மையமாக கொண்டு ‘வல்லினம்’ என்ற படைப்போடு களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஈரம் என்ற திகில் வெற்றி படத்தை கொடுத்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த அறிவழகன் எண்ணத்தில் உருவான படம் ‘வல்லினம்’.

படத்தோடு மைய புள்ளியாக இதுவரை தமிழ்நாட்டுக்கு அவ்ளோ பரிச்சியம் இல்லாத பாஸ்கட் பால் தீம்மை கையாண்டு இருக்கிறார்.

எந்த வித புயல்டுப் அறிமுகம் இல்லாமல் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் தன் ரயிலுக்காக கார்த்து கொண்டு இருக்கிறார் நகுல்.

அப்பொழுது ஒரு சிறிய ப்ளாஷ்பேக் கதையோடு நகர்கிறது படம், நகுலும் – கிருஷ்ணாவும் (சிறப்பு தோற்றத்தில்) நெருங்கிய நண்பர்கள். அதுமட்டுமல்லாமல் இருவரும் சிறந்த பாஸ்கெட்பால் வீர்கள்.

இந்நிலையில், ஒரு நாள் நடைபெற்ற பாஸ்கெட்பால் விளையாட்டில் எதிர்பாரத விதமாக நகுலின் வேகத்தால் தன் நண்பனை இழந்துவிடுகிறார். இதனால் சோகம் கொண்ட நகுல், ஊரும் வேண்டாம் இந்த கல்லூரியும் வேண்டாம் என்று பாஸ்கெட்பாலை எரிந்து விட்டு சென்னைக்கு தனது படிப்பை தொடர புறப்படுகிறார்.

சென்னை நேஷனல் கல்லூரியில் படிக்க வந்த இடத்தில் குணா, ஜெகன் போன்றவர்களின் நட்பு கிடைக்கிறது.

பிறகு எப்பொழுதும் போல கூத்து, கும்மாளம், நட்பு, காதல் என்று கல்லூரிக்கே உண்டான பாணியில் கதை நகர ஒரு கட்டத்தில் தன்னுடைய நண்பர்களும் பாஸ்கெட்பால் விளையாட்டு வீரர்கள் என்பது தெரிய வந்தும் தனக்கு அவ்விளையாட்டை பற்றி தெரியாது எனும் தோனியிலேயே நடந்து கொள்கிறார் நகுல்.

கிரிக்கெட்டுக்கே முக்கியத்துவம் தரும் அக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சேர்மேன் மற்றும் கிரிக்கெட் வீரரான சித்தார்த்துடன் இவர்கள் நன்பர்களுக்கு ஏற்படும் மோதல் கிரிக்கெட் பெரியதா, பாஸ்கெட்பால் பெரியதா எனும் போட்டியில் வந்து நிற்கிறது.

தனது இறந்த நண்பனுக்காக பாஸ்கெட்பால் விளையாட்டை கைவிடும் நகுல், தனது புதிய நண்பர்களுக்காக திரும்புவும் களமிறங்குகிறார்.

இந்த போட்டியில் யார் வென்றார்கள் மற்றும் விளையாட்டு எவ்வாறு வியாபாரம் ஆகிறது என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

நகுல் நடித்த படத்திலே மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் வல்லினம் தான் , இப்படத்திற்காக நடிப்பில் நிறைய மாறுதல்களைச் செய்திருக்கிறார் நகுல்.

ஒரு பாஸ்கெட்பால் விளையாட்டு வீரராக மிகவும் சிரத்தையுடன் பயிற்சி எடுத்து நடித்துள்ளார். விளையாட்டை நேரில் பார்த்த உணர்வை தருகிறார்கள் அவரும், அவரது நண்பர்களாக வரும் அம்ஜத், சீனியர் வீரர் மற்றும் எதிரணியில் வரும் மதிவாணன் ஆகியோர். இருப்பினும் பாஸ்கெட்பால் விளையாட்டு பற்றி தெரிந்தவர்களுக்கு ஏமாற்றமே.

கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் மிருதுளாவிற்கு வழக்கமாக (பணக்கார பெண்) கதாநாயகனை காரணமே இல்லாமல் காதலிக்கும் வேலை மட்டுமே கொடுத்திருப்பதால் நடிப்பிற்கு பெரிய வாய்ப்பில்லாமல் இருக்கிறது.

வில்லனாக வரும் சித்தார்த் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். மேலும் ஆதி, அது குல்கரனி, ஜே.பி, கிருஷ்னா, அனுபமா என நடிகர் பட்டாளம் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கின்றனர்.

படத்தின் தொழில்நுட்பம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எஸ்.எஸ். தமன் இசையில் பாடல்கள் சலித்து போனது, ஆனால் பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் தமன்.

அறிமுக ஒளிப்பதிவாளர் பாஸ்கரன், தன் முதல் படத்திலேயே யார் இந்த பாஸ்கரன் என்ற கேட்க வைத்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாகவும் மற்றும் நேர்த்தியாகவும் காட்சிபடுத்தியிருக்கிறார்.

ஒரு உன்னதமான படைப்புக்கு கண்டிப்பாக தோள் கொடுத்து தூக்க வேண்டும், அந்த வகையில் இது போன்ற படைப்பினை கொடுத்த அறிவழகனின் முயற்சியை பாராட்டலாம்.

மொத்தத்தில் வல்லினம் ஒரு உணர்ச்சி மிகையான உண்மையான படம் ஆனால் கமர்ஷியல் கலவை சேர்க்காமல் இருந்திருந்தால்!

மொத்தத்தில் விளையாட்டிற்கு கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை.

புழுக்கள் நெளியும் ஆட்டுக் கறி… குடலைப் புரட்டும் மாட்டுக் கறி..! – சென்னை பகீர்..?



அடிக்கடி ஹோட்டலுக்குப் போய் சிக்கன், மட்டன் என்று அசைவ உணவுகளை விரும்பிச் சுவைப்பவரா நீங்கள்? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்!

கடந்த வாரம், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு ஒரு போன் செய்தவர், ‘வெளி மாநிலத்தில் இருந்து பெட்டி பெட்டியாக ஆடு, மாடு இறைச்சிகளை, சென்னைக்குக் கொண்டு வர்றாங்க’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து இருக்கிறார்.

இந்த விஷயம் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படவே, உடனடியாக சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 5,000 கிலோ மாட்டு இறைச்சியும் சுமார் 3,500 கிலோ ஆட்டு இறைச்சியும் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர், ”எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்தான் நாங்கள் சோதனைக்குக் கிளம்பினோம்.

 நாங்கள் சோதனை நடத்த ரயில்வே அதிகாரிகள் முதலில் அனுமதிக்கவே இல்லை. அதன்பிறகு, ரயில்வே துறை உயர்அதிகாரிகளிடம் பேசித்தான் அனுமதி வாங்கினோம்.

ஆந்திராவில் இருந்து வந்த நிறைய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பெட்டி யைப் பிரித்ததுமே துர்நாற்றம் குடலைப் பிடுங்கியது. அவ்வளவும் மாட்டுக்கறி.

இன்னொரு பெட்டியில் இருந்த கறியைத் திறந்தபோது, ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. இவை எல்லாம் ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

அங்கே இருந்து சென்னை வந்து சேர கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆகும் என்றால், அந்த மாட்டை எத்தனை நாட்களுக்கு முன் வெட்டி இருப்பார்கள்? அந்த இறைச்சியை சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்குதான் சப்ளை செய்திருக்கிறார்கள். எங்கள் சோதனை யைப் பார்த்ததும், இறைச்சியை டெலிவரி எடுக்க வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

கண்டிப்பாக இதை ஒரு தனிநபர் செய்திருக்க முடியாது. இதற்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருக்க வேண்டும். சென்னைக்கு வந்து இறங்கிய அத்தனை இறைச்சி பார்சல்களும் தகுதிச்சான்றிதழ் பெறாதவை.

உணவுப் பொருட்களை அனுப்பும் பட்சத்தில், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில்வே சுகாதாரத்துறை அதிகாரிகளின் அனுமதிச் சான்றிதழ் கண்டிப்பாக வேண்டும். சான்றிதழ் இல்லாத பட்சத்தில், அங்கு இருக்கும் ரயில்வே அதிகாரிகளே அவற்றைப் பறிமுதல் செய்து இருக்க வேண்டும். ஆனால் ஏனோ அவர்கள் செய்யவில்லை.

அங்கு பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை, கொடுங்கையூர் மாநகராட்சி குப்பை கொட்டும் இடத்தில் குழிதோண்டி, பிளீச்சிங் பவுடர் போட்டு, பினாயில் ஊற்றிப் புதைத்தோம். சென்னைக்கு வந்த இறைச்சிப் பெட்டிகள் மீது, ‘உஸ்மான், சென்னை’ என்று மட்டும்தான் எழுதப்பட்டு இருக் கிறது. யார் அந்த உஸ்மான் என்றும் தேடி வருகிறோம்.

ஒரு நாளைக்கு சுமார் 8,000 கிலோ இறைச்சி கொண்டு வருகிறார்கள் என்றால், அது ரோட்டோரக் கடைகளுக்கு மட்டும் போயிருக்க சாத்தியம் இல்லை. நாங்கள் விசாரித்த வரையில் சென்னையில் உள்ள சில ஸ்டார் ஹோட்டல்களுக்கும் இந்த இறைச்சி சப்ளை செய்யப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரம், இந்த விவகாரத்தில் ஈடுபட்ட அத்தனை பேரையுமே பிடித்து விடுவோம்” என்று உறுதியுடன் சொன்னார்.

சிந்தாதரிப்பேட்டையில் இறைச்சிக் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் பேசினோம். ”எங்க கிட்ட ஆட்டுக் கறி வாங்கினா, ஒரு கிலோ 430 ரூபாய். வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரும் கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை 120 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதைப் பெரும்பாலும் ஹோட் டல்காரங்கத்தான் வாங்கிட்டுப் போவாங்க.

அந்த மாதிரி இறைச்சியை எங்காவது ஒரு குடோன்ல வெச்சுப் பிரிச்சு, நேரடியா சம்பந்தப்பட்டவங ்களுக்கு சப்ளை பண்ணிடுவாங்க” என்றார். தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீநிவாசனிடம் பேசினோம். ”நானும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன்.

ரோட்டோரத்தில் கடை நடத்துபவர்களும், டாஸ்மாக் கடைகளுக்குப் பக்கத்தில் கடை வைத்து இருப்பவங்களும்தான் இது மாதிரியான கறியைப் பயன்படுத்த முடியும். பெரிய ஹோட்டல்களில் எல்லாம் ஃப்ரெஷ்ஷாக வெட்டப்படும் இறைச் சியை மட்டும்தான் பயன்படுத்துகிறோம்” என்றார்.

சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி யிடம் கேட்டபோது, ”சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனியும் இப்படி நடக்காமல் தடுக்கப்படும்” என்றார். வெளியே சாப்பிடும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கத்தான் வேண்டும்..

குளியலறையின் தரையை சுத்தம் செய்வதற்கான சில எளிய வழிகள்..!



பொதுவாக வீட்டிலேயே குளியலறையில் தான் கிருமிகள் மற்றும் அழுக்குகள் அதிகம் இருக்கும். அத்தகைய குளியலறையை சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்ள, நாம் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களைத் தான் பயன்படுத்துவோம்.

ஆனால் பணம் இல்லாத சமயத்தில், குளியலறையை சுத்தம் செய்யும் தீர்ந்த நேரத்தில் என்ன செய்வீர்கள்? யோசிக்காதீர்கள், அப்படி பணம் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே குளியலறையை சுத்தப்படுத்தலாம். அதிலும் அந்த பொருட்கள் அனைத்தும் மிகவும் பிரபலமான சுத்தப்படுத்துவதில் முதன்மையாக இருக்கக்கூடியவை.

இங்கு குளியலறையின் தரையை சுத்தம் செய்வதற்கு உதவும் சில இயற்கைப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவற்றைப் பயன்படுத்தி உங்கள் குளியலறையின் தரையை பளபளப்புடன் வைத்துக் கொள்ளுங்கள்.

1/2 கப் பேக்கிங் சோடாவைக் கொண்டு சூப்பராக குளியலறையின் தரையை மின்ன வைக்கலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், பேக்கிங் சோடாவை குளியலறையின் தரையில் தூவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் தேய்க்க வேண்டும். இதனால் குளியலறையின் தரை சும்மா பளிச்சுன்னு இருக்கும்.

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை உள்ளதால், இதன் சாற்றினை குளியலறையின் தரையில் தெளித்து, உடனே நன்கு பிரஷ் கொண்டு தேய்த்துவிட்டால், கறைகள் நீங்கிவிடுவதோடு, குளியலறையும் நன்கு நறுமணத்துடன் இருக்கும்.

உப்பும் ஒரு சூப்பரான சுத்தப்படுத்தும் பொருட்களில் ஒன்று. அதிலும் மஞ்சள் நிற கறைகளை எளிதில் போக்க வேண்டுமானால், உப்பை தரையில் தூவி, சிறிது நேரம் கழித்து பிரஷ் கொண்டு தேய்த்து, பின் சுடுநீர் கொண்டு குளியலறையை கழுவி விட வேண்டும்.

வெள்ளை வினிகருக்கும் சுத்தம் செய்யும் தன்மை உள்ளது. அதிலும் வினிகரை குளியலறையின் தரையில் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சை சாற்றினை தெளித்து, பிரஷ் கொண்டு தேய்த்து விட்டு கழுவ வேண்டும்.

ஆம், சோடா கூட சுத்தம் செய்யும் பண்பைக் கொண்டுள்ளது. அதற்கு சோடாவை கறை அதிகம் உள்ள இடங்களில் ஊற்றி, பின் தேய்க்க வேண்டும். இதனால் கறைகள் உடனே நீங்கும்.

வோட்கா சற்று விலை அதிகமான பொருளாக இருந்தாலும், இதனைக் கொண்டும் குளியலறையை சுத்தம் செய்யலாம்.

ஹலோ லன்ச் முடிஞ்சுதா.. கொட்டாவியா வருதா.. ஒரு நிமிஷம் இங்க வாங்க...!



இன்றைய அவசர காலத்தில் வீட்டில் தூங்குவதை விட, அலுவலகத்தில் தூங்கும் நேரம் அதிகமாகிவிட்டது. என்ன புரியவில்லையா? ஆம், காலையில் எழுந்து சரியாக சாப்பிடாமல், உடற்பயிற்சி செய்யாமல், அலுவலகத்திற்கு வந்து வேலை செய்து, மதிய வேளையில் நன்கு மூக்கு முட்ட சாப்பிட்டு, பின் என்ன தூக்கம் தான்.

 இதனால் செய்யும் வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியாமல், மாலையில் நீண்ட நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டியுள்ளது. இத்தகைய பிரச்சனையை அலுவலகத்திற்கு செல்வோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சந்திப்போம்.

ஏனெனில் காலையில் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்த பின்னர், மதியம் முழு சாப்பாட்டை சாப்பிடுவதால், செரிமான மண்டலத்தின் வேகம் குறைந்து, உணவுப் பொருட்கள் செரிமானமடைய உடலின் எனர்ஜியானது செலவாவதால், உடலானது சோர்வடைந்து, மதிய வேளையில் தூக்கம் வருகிறது.

அதுமட்டுமின்றி, அப்படி தூக்கம் வரும் போது தூங்காமல் இருந்தால், பின் தலை வலியானது அதிகரித்துவிடும். ஆகவே இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட ஒருசில ட்ரிக்ஸ்களை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். அதை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் மதிய வேளையில் வரும் தூக்கத்தில் இருந்து விடுபடலாம்.

மதிய வேளையில் தூக்கம் வராமல் இருக்க வேண்டுமெனில், முதலில் அளவாக சாப்பிட வேண்டும். அதிலும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். இத்தகைய உணவுகள் வயிற்றை நிரப்புவதோடு, ஊட்டச்சத்து நிறைந்தும் இருக்கும். உதாரணமாக, சாலட் மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றது.

ஒருவேளை நன்கு மூக்கு முட்ட சாப்பிட்ட பின், பாட்டு கேட்டால் அது தூக்கம் வருவதைக் கட்டுப்படுத்தலாம். அதிலும் நன்கு குத்து பாட்டாக கேட்டால், அது உடலின் சோர்வைப் போக்கி, தூக்க உணர்வைத் தடுக்கும்

உட்கார்ந்து கொண்டே லேசாக ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சிகளை செய்தால், தூக்கம் கலைவதோடு, தசைகள் புத்துணர்ச்சி அடைந்துவிடும்.

பொதுவாக புதினா புத்துணர்ச்சி தரும் உணவுப் பொருட்களில் ஒன்று. ஆகவே புதினா சுவை கொண்ட சூயிங் கம்மை வாயில் போட்டு மெல்லுங்கள்.

உணவு உண்ட பிறகு, கம்ப்யூட்டர் முன்பே நீண்ட நேரம் இல்லாமல், தூக்கம் வரும் சமயம் லேசான நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது செரிமானத்தை எளிதாக்கி, தூக்க கலக்கத்தில் இருந்து விடுதலை தரும்.

நன்கு ஃபுல்லாக சாப்பிட்ட பிறகு, வேலை செய்யும் போது தூக்கம் வந்தால், உடன் பணி புரியும் நண்பர்களிடம் சிறிது நேரம் பேசுங்கள். இதுவும் தூக்கத்தை விரட்டிவிடும்.

இல்லாவிட்டால் ஒரு கப் காபி குடிக்கலாம். இது நிச்சயம் தூக்கத்தை போக்கி, மனதை புத்துணர்ச்சி அடையச் செய்யும்.

என்ன செய்தாலும் தூக்கம் போகவில்லையா, அப்படியானால் நண்பர்களுக்கு போன் செய்து பேசுங்கள். இது தூக்கம் வரும் எண்ணத்தை தடுப்பதோடு, மனதை ரிலாக்ஸ் அடையவும் செய்யும்.

டார்க் சாக்லெட் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, உடலின் குளுக்கோஸ் அளவை அதிகரித்து, உடலின் சோர்வைப் போக்கி, தூக்கத்தை தடுக்கும்.

தண்ணீர் குடித்தால், உடலின் வறட்சி நீங்குவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் சோர்வைப் போக்கி, தூக்க கலக்கத்தில் இருந்து விடுதலைப் பெறச் செய்யும்.

நுரையீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்..!



மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் பணியினை தவறாமல் செய்ய வேண்டுமெனில் நாம் அவற்றை பேணி காப்பது அவசியம்.அந்த வகையில் நுரையீரலை எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

நாம் நமது நுரையீரலை அதிக அக்கறையுடன் கவனித்து வந்தோமென்றால், நுரையீரலும் நம் வாழ்நாள் முழுதும் செயல்படும்.எவ்வித வெளிப்புற பாதிப்பும் இல்லாதவரை, நமது நுரையீரலும் நீடித்து உழைக்கக்கூடியவையே. சில விதி விலக்குகள் தவிர்த்து, நாம் நமது நுரையீரலை எவ்வித சிக்கலுக்கும் உள்ளாக்காத வரை, அவையும் நம்மை எவ்வித சிக்கலுக்கும் உள்ளாக்குவதில்லை. நமது ஆயுள் உள்ள வரை ஆரோக்கியமான நுரையீரலைப் பெற சில வழிகளை இக்கட்டுரையில் காண்போம்.


புகைப்பிடித்தலை நிறுத்துங்கள்

அடிப்படையில் புகைப்பிடித்தல் என்பது நமது நுரையீரலுக்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடிய விஷயமாகும். புகைப்பிடித்தலுக்கு உள்ளாக்கும் போது நமது நுரையீரலுக்கு எவ்வித பாதுகாப்பும் கிடைப்பதில்லை. எந்த அளவிற்கு அதிகம் புகைக்கிறோமோ, அதே அளவிற்கு கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் புற்றுநோய் மற்றும் COPD தாக்கும் வாய்ப்புகள் அதிகம். நாம் இருக்கும் இடத்தில் எவரேனும் புகைப்பிடித்து இருந்தாலோ அல்லது நமது அருகிலிருக்கும் மூன்றாவது நபர் புகைப்பிடித்தாலோ நமக்கு தீங்கு விளையும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. சிகரெட் புகைப்பதை மட்டும் நிறுத்தினால் போதாது. மாரிஜூனா, சுருட்டுகள், குழாய் மூலம் புகைப்பிடித்தல், நமது நுரையீரலுக்கு அதே வழியில் தீங்கு விளைவிக்கும்.


சுத்தமான காற்றுக்காக போராடுங்கள்

உலகில் 155 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். காற்று மாசுபாடு ஆஸ்துமா, COPD போன்ற நோய்களை மட்டும் தருவதில்லை மேலும் மக்களையும் கொல்கிறது. ஒழுங்கு குறைபாடுகளை எதிர்ப்பதன் மூலமும் சுகாதாரமான காற்றுக்கான விதிகளை ஆதரிப்பதன் மூலமும் நாம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தனி நபராக நாம் செய்ய வேண்டியது யாதெனில் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவது, குப்பைகள் மரக்கட்டைகள் எரிப்பதை தவிர்ப்பது, வாகனங்கள் பயன்படுத்தலை குறைப்பது ஆகியவை ஆகும்.


அதிக உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்

உடற்பயிற்சி, நுரையீரலை மட்டும் வலிமைப்படுத்துவதில்லை. அதையும் தாண்டி நமக்கு பல நன்மைகள் செய்கின்றது. நுரையீரல் இதயம் மற்றும் தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம் இதயத்திற்கான சுவாசத்தை சிறந்த முறையில் பெற முடியும். நாள்பட்ட நுரையீரல் நோயால் தாக்கப்பட்டவர்க்கு உடற்பயிற்சி பல நன்மைகளை செய்கிறது. நுரையீரல் சிறப்புடன் செயலாற்ற நம்மால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வது அவசியமாகும். குளிர்காற்று, ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளை தூண்டினால், அதனை வெதுவெதுப்பாக்க கழுத்துகுட்டையை (கழுத்தையும் தோளினையும் மறைக்கும் துணி) பயன்படுத்துதல் அவசியம் அல்லது முகத்தை மறைக்க வேண்டும்.



வெளிப்புற காற்று மாசுபாடு குறித்து எச்சரிக்கை அவசியம்

குறிப்பாக கோடை காலத்தில் சில பகுதிகளில் உள்ள காற்று மாசுபடுதலால், வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செய்வதும், வெளிப்புறத்தில் நேரம் செலவழிப்பதும் கூட நுரையூரலை பாதிக்கும். அதிலும் நுரையீரல் பிரச்சனைகளை கொண்டவர்கள், இக்காலத்தில் காற்று மாசுபடுதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


வீட்டின் உள்ளும் காற்றை மேம்படுத்துங்கள்

காற்று மாசுபாடு ஒரு வெளிப்புற பிரச்சனை மட்டும் அல்ல. மரம் எரிக்கும் அடுப்புகள், நெருப்பு, கட்டுமான பொருட்கள் மற்றும் சில மெழுகுவர்த்திகள் மற்றும் காற்று சுத்தப்படுத்திகள் உட்பட வீட்டின் உட்புற காற்றை மாசுபடுத்தும் ஆதாரங்கள் நிறைய உள்ளன. வீட்டின் உட்புற காற்றை மேம்படுத்த ஒரு மூன்று பக்க அணுகுமுறை பரிந்துரைக்கப்படுகிறது. அதில் காற்றை மாசுபடுத்தும் ஆதாரங்களை நீக்குவது, காற்றோட்டத்தை மேம்படுத்துவது மற்றும் காற்று தூய்மையாக்கிகளை பயன்படுத்துவது ஆகியன ஆகும். காற்று தூய்மையாக்கிகள் தேவையற்ற துகள்களை நீக்கும் பணியை செய்கின்றன. ஆனால் அவை வாயுக்களை பாதிப்பதில்லை.


ஆரோக்கியமான உணவினை உண்ணுங்கள்

ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்த உணவினை உண்பது நமது நுரையீரலுக்கு நன்மை விளைவிக்கும் ஒரு ஆய்வு ஆதாரத்து தான் கூறுகிறது. மேலும் 2011-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின் படி காலிஃப்ளவர், கேல், ப்ராக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை அதிகம் உண்பவர்களை, மேற்சொன்ன காய்கறிகளை குறைவாக உண்பவர்களை விட நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயம் பாதியாக குறைகிறது. மேலும் பச்சை இலைகளுடன் கூடிய சிறந்த காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது நமக்கு உயர்ந்த பாதுகாப்பு விளைவினை தருகிறது.


பணியாற்றும் போதும் நுரையீரலை பேணுங்கள்

கட்டுமான தொழிலில் இருந்து முடிவெட்டும் தொழில் வரை அனைத்துவிதமான தொழில்களில் ஈடுபடுவோர்க்கும் நுரையீரல் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். நம் தொழில் மூலம் ஏற்படக்கூடிய எண்ணற்ற காரணிகள் இருந்தாலும் பெயிண்ட், தீப்பொறி தூசி, துகள்கள் மற்றும் டீசல் வெளியேற்ற கழிவுகள் ஆகியவை அதிக தீமை தருபவை ஆகும். நாம் வேலை செய்யும் நிறுவனம் நமக்கு பாதுகாப்பு உபகாரணங்கள் வழங்கினால், நாம் அதை கட்டாயமாக அணிய வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை எனில் நாம் தொழிற்சங்க பிரதிநிதி, உள்ளூர் சுகாதார நிறுவனம்,மற்றும் அதே செயல்பாடுகள் கொண்ட உள்ளூர் நிர்வாகம் ஆகியோரை பாதுகாப்பு குறித்து அணுகலாம்.

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!


ரேடானின் அளவை பரிசோதியுங்கள்

ரேடான் இயற்கையாக உண்டாகும் ஒரு கதிரியக்க வாயு. இது பூமிக்கு அடியில் யுரேனிய பிளவு முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பொதுவாக சுவர்கள் மற்றும் அடித்தளத்தில் உள்ள பிளவுகள் மூலம் ஒரு வீட்டை அடைகிறது. ரேடான் புகைப்பிடிக்கும் பழக்கமற்றவரை நுரையீரல் புற்றுநோய் தாக்கும் காரணிகளுள் முக்கிய காரணியாக உள்ளது. மேலும் இது புகைப்பிடித்த பின் நோய் உண்டாக்கும் இரண்டாவது அபாயகரமான காரணியாகவும் உள்ளது. நமது வீட்டை சோதனை செய்து அங்கு ரேடான் இல்லை என்று உறுதி செய்து கொள்வது நமது நுரையீரலுக்கு நல்லது.


சுத்தமான பொருட்களையே பயன்படுத்துங்கள்

நாம் வீட்டில் ஈடுபடும் நடவடிக்கைகளான வீட்டை சுத்தம் செய்தல், பொழுதுபோக்கு, வீட்டை மேம்படுத்துதல் போன்ற பல வேலைகள், நாம் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வாயு மற்றும் துகள்களை எடுத்து செல்ல முடியும். எப்போதும் பாதுகாப்பான பொருள்களை தேர்வு செய்து, காற்றோட்டமான பகுதியில் வேலை செய்வதும், தூசியை தவிர்க்க முகமூடி அணிந்து கொள்வதும் நம்மை காத்து கொள்ளும் வழிகளாகும். எண்ணெய் சார்ந்த வண்ணப்பூச்சுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றிலிருந்து ஆவியாகும் கரிம சேர்மங்கள் வெளியாகும். அதற்கு பதிலாக தண்ணீர் சார்ந்த வண்ணப்பூச்சுகள் தேர்வு செய்ய வேண்டும். சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்களான அம்மோனிய மற்றும் ப்ளீச் ஆகியவை கலந்திருக்கும். ஆகவே அவற்றை வாங்கும் முன் அப்பொருட்களின் மீது ஒட்டியுள்ள சீட்டினை கவனமாக படிக்க வேண்டும்.

அதிகப்படியான உடல் பருமனால் சந்திக்கக்கூடிய விநோதமான பிரச்சனைகள்..!



குண்டாக இருப்பது என்பது வாழ்க்கையை சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டு செல்ல மிகவும் தடையாக இருக்கும். ஏனெனில் ஒருமுறை குண்டாகிவிட்டால், அதனால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பல பிரச்சனைகள் விரைவில் வந்துவிடுகின்றன.

மேலும் அனைவருக்கும் உடல் பருமனடைந்தால், இந்த பிரச்சனைகள் மட்டும் தான் வரும் என்று தெரியும். ஆனால் உடல் பருமனடைந்தால், இதுப்போன்று இன்னும் வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா? ஆம், உதாரணமாக உடல் பருமனடைந்தால் நிம்மதியான தூக்கத்தை இழக்க நேரிடும். இதுப்போன்று நிறைய பிரச்சனைகள் உடல் பருமனடைந்தவர்கள் சந்திப்பார்கள்.


தூக்கமின்மை

உடல் பருமனடைந்தவர்களால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. ஏனெனில் அவர்கள் தூங்கும் போது, காற்று செல்லும் வழியானது அடைத்து, தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இதனால் தூங்கும் போது மிகுந்த கஷ்டத்தை உடல் பருமன் அடைந்தவர்கள் சந்திப்பார்கள்.


குறட்டை

ஒருவேளை அசதியில் தூங்கிவிட்டால், மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமத்தினால், மற்றவர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் குறட்டையின் சப்தமானது எழுகிறது.


விரைவில் முதுமை தோற்றம்

ஆய்வு ஒன்றில், உடல் பருமன் அடைந்தவர்கள் புகைப்பிடிப்பவர்களை விட சீக்கிரம் முதுமை தோற்றத்தை பெறுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கண்புரை நோய்

பொதுவாக கண்புரை நோயானது உடல் பருமனடைந்தவர்களுக்கு ஏற்படும். ஏனெனில் உடல் பருமன் அதிகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு குறைந்துவிடுகிறது.


செரிமான பிரச்சனை

உடல் பருமன் அடையும் போது, வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களானது வயிற்றில் பிரச்சனையை ஏற்படுத்தி, அசிடிட்டி, செரிமான பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.


குடலிறக்கம்

உடல் பருமன் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர், அவர்களுக்கு குடலிறக்கத்திற்கான பாதிப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் வயிறு பெரிதாக இருப்பதால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயங்கள் குணமாவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால், அப்போது வெட்டுப்பட்ட இடத்தில் தசைகளானது வளர்ந்துவிடுகிறது. இதனால் உடல் பருமன் உள்ளவர்கள் கடுமையான வலியை உணரக்கூடும்.


புரோஸ்டேட் அளவு அதிகரிக்கும்

உடலின் பருமன் அதிகரிக்கும் போது, ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியும் பெரிதாக ஆரம்பிக்கும். இதனால் புரோஸ்டேட் பெரியதாகி, நாளடைவில் புரோஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.


கற்பதில் சிரமம்

சிறுவயதிலேயே குழந்தைகள் உடல் பருமனால் அவஸ்தைப்பட்டால், ஹார்மோன் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்களின் கற்கும் திறனானது குறைந்துவிடும்.


நோயெதிர்ப்பு சக்தி குறைவு

உடல் பருமன் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, அவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருக்கும். இதனால் தான் அவர்களுக்கு நோய்களானது எளிதில் தொற்றுகிறது.


ஆஸ்துமா

அதிகப்படியான உடல் பருமன் இருந்தால், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதோடு, அந்த ஆஸ்துமாவும் மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும்.


கீல்வாதம்

அதிகப்படியான யூரிக் அமிலத்தின் வெளிப்பாட்டினால், மூட்டுகளில் உள்ள திசுக்களாது உடைக்கப்பட்டு கீல்வாதம் ஏற்படுகிறது. பொதுவாக இத்தகைய பிரச்சனை எந்த வயதில் உடல் பருமனுடன் இருந்தாலும் ஏற்படும்.


விறைப்புத்தன்மை குறைபாடு

ஆண்கள் உடல் பருமனாக இருக்கும் போது, நீரிழிவு, உயர் இரத்த கொலஸ்ட்ரால் மற்றும் பெரிதான புரோஸ்டேட் ஆகியவற்றினால், விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட்டு, குழந்தை பிறப்பதில் பிறப்பதில் கஷ்டமாகிவிடும்.

குழந்தை வளர்ப்பில் முக்கியமானவை..!



லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்கிறார்கள்.எதிரில் நிற்பவன் ஏழை என்று தெரியும்.அவன் கடன் வாங்கித்தான் கொடுக்கவேண்டும்.அடுத்தவன் கஷ்டம் நமக்கு முக்கியமல்ல்! பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.வன்கொடுமைகளுக்கு முடிவில்லை.

தங்களது கீழ்த்தரமான ஆசைகளுக்காக உயிர்களைப் பலியாக்குவது பற்றி கவலைப்படுவதேயில்லை.இன்னும் இன்னும் இருக்கிறது.இத்தகைய பிரச்சினைகளுக்குப் பின்னால் உள்ள விஷயம் இதுதான் –நாம் சக மனிதனை எந்திரமாகவே பார்க்கிறோம்.நமது விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கவேண்டுமென்று கருதுகிறோம்.


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்திரமாக நினைத்துக்கொள்வதில் பிரச்சினை துவங்குகிறது.நான் விரும்பும் படிப்பை படிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.தாங்கள் சொல்லும் பையனை,பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

அவர்களுக்கு நல்லது எது என்று எனக்குத்தெரியும் என்பார்கள்.குடும்பங்களைக் கவனிக்கும் பலருக்குத்தெரியும்.பெரும்பாலும் இவையெல்லாம் தந்தையால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும். தனது மனைவிக்கு,குழந்தைகளுக்கு மனம் என்று ஒன்று இருக்கிறது என்பது அவர்களுக்கு பொருட்டே அல்ல!

மனத்தினை மறுத்து எந்திரமாக மட்டுமே கருதி வளர்க்கப்பட்ட ஒருவர் சக மனிதனையும் அப்படியே கருதுகிறார்.இன்னொரு மனிதனை புரிந்து கொள்வதில் பிரச்சினை இருக்கிறது.இதன் முதல்படியாக கவனமாக கேட்பது பற்றி சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.நம்மைச்சுற்றி உள்ளவர்களை புரிந்து கொள்ள அவர்களது உணர்வுகளை நாமும் உணரவேண்டும்.இன்றைய மனிதனின் ஆகப்பெரிய துக்கமெல்லாம் என் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பதாக இருக்கிறது.


ஆங்கிலத்தில் empathy என்ற சொல்வார்கள்.தமிழ் அகராதிகளில் சில இடங்களில் பச்சாதாபம் என்று போட்டிருக்கிறார்கள்.கற்பனையாக இன்னொருவரின் உள்ளக்கிளர்ச்சியை உணர்தல் என்று சில இடங்களில் இருக்கிறது.இன்று வளர்த்தெடுக்க வேண்டிய திறமை என்பது இதுதான்.குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு திறமை.

I feel how you feel என்று புரிந்து கொள்ளலாம்.கணவன்,மனைவி ஆகட்டும்,பெற்றோர் குழந்தைகள் ஆகட்டும்,நண்பர்கள்,உடன் பிறந்தவர்கள்என எல்லா உறவுகளிலும் இதுவே முக்கியமானது.ஆமாம்,நீங்கள் உணர்வதை நானும் உணர்ந்தால்? பிரச்சினைகளின் தீர்வு இங்கேதான் இருக்கிறது.நம்மால் அப்படி உணரமுடியாமல்தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

கற்பனையாக மற்றவர் உணர்வதை உணரும் திறமையை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும். அப்படியானால் நாம் கற்பனைவளத்தை குழந்தைகளிடம் உருவாக்கவேண்டும்.

ஏழை,எளியவர்களுக்காக பரிந்து பேசுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.அவர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு பேசுகிறார்கள்.சமூகத்தின் பல விஷயங்களை விவாதிக்கிறார்கள்.அவர்கள் எங்கிருந்து அந்த்த் திறமையை பெற்றார்கள்? அவர்கள் பாடப்புத்தகங்களைத்தாண்டி பல்வேறு விஷயங்களை படிக்கிறார்கள்.

Empathy  என்பதை கூடுவிட்டுக்கூடு பாய்வது என்றும் நாம் சொல்லலாம்.நம்முடைய எழுத்தாளர்களை நாம் இப்படி சொல்கிறோம்.அவர்கள் இத்திறமையை எங்கிருந்து பெற்றார்கள்? கவனித்துக்கேட்பதன் மூலமாகவும்,பள்ளிப்படிப்பைத்தாண்டி ஏராளமான நூல்களைப் படித்தும் பெற்றார்கள்.

கலை இலக்கியம் தவிர்த்து இத்திறமையை வளர்த்துக்கொள்வது சாத்தியமானதல்ல! பலருக்கு இந்த அனுபவம் இருக்க முடியும்.சினிமா பார்த்து உணர்ச்சிவசப்படுகிறோம்.நடிப்பவரின் துயரத்தில் நாமும் பங்குபெறுகிறோம்.நாவலில் கதை மாந்தர்களின் உணர்ச்சியை நாமும் அனுபவிக்கிறோம்.நிஜத்தில் அப்படி ஒரு சூழ்நிலையை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

குழந்தைகளுக்கு கதை சொல்வதுதான் முதல்படி.அத்தைகளும் பாட்டிகளும் இதை சிறப்பாக செய்து வந்தார்கள்.இன்றைய சூழல் அப்படி இல்லை.சிறுவர்களுக்கான இலக்கியம்,கலை வளராத சமூகம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.உரிய நேரத்தில் புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

பாதி கதை சொல்லிவிட்டு மீதி கதையை அவர்களாக உருவாக்கத் தூண்ட வேண்டும்.குழந்தைகள் கற்கும் திறனில் கற்பனை வளம் நல்ல மாற்றத்தைக்கொண்டு வரும்.சென்ற பதிவில் கூறியவாறு கவனித்துக்கேட்கவும்,சக மனிதர்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ளும் திறனும் பெற்றுவிட்டால் போதுமானது.எத்தகைய சூழ்நிலையிலும் ஒருவரால் சிறப்பாக இயங்க முடியும்.

மார்ச் 3 முதல் பேஸ்புக் மசெஞ்சர் செயலிழப்பு..!



கணனிகளில் விண்டோஸ் மூலமாக பேஸ்புக் பயன்படுத்தும் போது மசெஞ்சர் மூலம் தகவல்களைப் பறிமாறிக்கொள்ளும் வசதி, மார்ச் 3ம் திகதி முதல் செயலிழந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்டோஸ் போன் 8 கருவிகளில் பேஸ்புக் மசெஞ்சர் அறிமுகப்படுத்தப்படும் என்று மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்ததற்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


உலகம் முழுவதும் 1 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பேஸ்புக் வலைத்தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.


கணனிகளில் பேஸ்புக்கைப் பயன்படுத்தும் போது வலது பக்கத்தில் மசெஞ்சர் காணப்படும்.

மொபைல் போன்களில் பேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்கள் தகவல்கள் பக்கத்திற்கோ அல்லது பேஸ்புக் மசெஞ்சர் என்ற மொபைல் சேவையைத் தரவிறக்கம் செய்தோ தகவல்களைப் பறிமாறிக்கொள்ள வேண்டும்.


தற்போது மொபைல் கருவிகள் மூலமாக பேஸ்புக் வலைத்தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அதில் கவனம் செலுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


இதனால் வரும் மார்ச் 3ம் திகதி முதல் கணிப்பொறி விண்டோஸ் மூலமாக பேஸ்புக் மசெஞ்சர் பயன்படுத்துவது நிறுத்தப்படுகிறது.


எனினும் தகவல் பக்கங்களுக்குச் சென்று தகவல்களைப் பறிமாறிக்கொள்ளலாம்.

மனைவியை ஏமாற்றுவதில் இத்தாலி, பிரான்ஸ் ஆண்கள் முதலிடம்...!



மனைவிக்கு துரோகம் செய்வதில் பிரான்ஸ், இத்தாலி நாட்டு ஆண்கள் முதலிடத்தில் இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் கருத்துக் கணிப்பு நிறுவனம், மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்கள் குறித்த கருத்து கணிப்பை பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நடத்தியது.

4500 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்த தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

அதன்படி, வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து மனைவிக்கு துரோகம் செய்வதில் முதலிடத்தில் இருப்பவர்கள் பிரான்ஸ், இத்தாலி ஆண்கள்தான்.

இரு நாடுகளிலும் 55 சதவீதம் பேர், மனைவிக்கு துரோகம் செய்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே, நடிகையும் காதலியுமான ஜுலி கயாத்துடன் இருப்பது போன்ற படங்கள் வெளியாயின.

இந்த படங்களால் ஹோலண்டேவுக்கும் அவரது மனைவி வலாரிக்கும் இடையிலான உறவு முறிந்தது.

இந்த சூழ்நிலையில் வெளியாகி உள்ள கருத்து கணிப்பு முடிவு அதிபரும் விதிவிலக்கு அல்ல என்பதையே காட்டுகிறது.

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமரும் அரசியல் தலைவருமான பெர்லுஸ்கோனியும் பல பெண்களுடன் தொடர்பு வைத்து புகாரில் சிக்கியவர்தான்.

சிறுமிகளுடன் உறவு வைத்ததாக கடந்த ஆண்டு அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெண்களை காதலிப்பது, உண்மையாக நடந்து கொள்வதில் இங்கிலாந்து ஆண்கள் முதலிடத்தில் உள்ளதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் 42 சதவீதம் பேர் மனைவியை ஏமாற்றுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஜெர்மனியில் 46 சதவீதம் பேர் மனைவியை ஏமாற்றுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.