Sunday 9 March 2014

''உன்னை மாதிரி நல்லவனா இருக்க என்னால முடியாது. அட்லீஸ்ட், உன் கூடவாவது இருக்கேனே..?''



''உன்னை மாதிரி நல்லவனா இருக்க என்னால முடியாது. அட்லீஸ்ட், உன் கூடவாவது இருக்கேனே?'' - அமலா பாலுக்கான அந்த டப்பிங் டயலாக்கை 'ஓ.கே.’ செய்துவிட்டு, என் பக்கம் திரும்பினார் சமுத்திரக்கனி. 'நிமிர்ந்து நில்’ இயக்கம், 'வேலையில்லா பட்டதாரி’, 'வசந்தின்டே கனல்வழிகளில்’  நடிப்பு என்று பரபரப்பாகப் பறக்கிறார் கனி.

''சிலையும் நீயே... சிற்பியும் நீயே! இதுதான் 'நிமிர்ந்து நில்’ படத்தின் ஒன்லைன். 'அவன் தப்பு, இவன் தப்பு’னு சொல்லிச் சொல்லியே நாம பண்ற தப்பை நாம நியாயப்படுத்திக்கிறோம். 'சிகரெட் பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதி’னு போட்டிருக்கும் இடத்தில்தான் ஒரு கும்பலே நின்னு சீரியஸா தம் போட்டுட்டு இருக்காங்க. சட்டத்தை யாரோ ஒரு சிலர் மட்டும் கடைப்பிடிச்சா, பத்தாது; எல்லாருமே கடைப்பிடிக்கணும். அப்பத்தான் எல்லாம் சரியாகும்.

படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டர் பேர்... அரவிந்தன் சிவசாமி. ப்ளஸ் டூ வரை குரு குலத்துல படிச்சு, ஸ்டேட் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தவன். பிரார்த்தனை, பைபிள், சித்தாந்தம், வேதாந்தம்னு ஒழுக்கமா வளர்ந்தவன். அதனாலயே அவனால் இந்தச் சமூகத்தோட சேர்ந்து வாழ முடியாது. எல்லாரும் எதையோ துரத்திட்டு ஓடுறதைப் பார்த்துட்டு, 'ஏன் யாருமே சாந்தமா, சந்தோஷமா இல்லை?’னு ஏங்குவான். அப்படிப் பட்டவன், கோபத்துல வெடிச்சா எப்படி இருக்கும்? அதுதான் படம்!

ரவிக்கு, இதில் ரெண்டு கேரக்டர். ஒருத்தன் நல்லவன்; இன்னொருத்தன் ரொம்ப நல்லவன். 'தம்பி... இதான் உன் முதல் படம்னு நினைச்சு, மொத்த எனர்ஜியையும் போடு’னு சொன்னேன். என்ன சொன்னாலும் மறுபேச்சு பேசாம நடிச்சுக்கொடுக்கிறான்.

ஒரு காட்சிக்காக சாக்கடையில் விழச் சொன்னேன். சட்டுனு விழுந்தான். அமலா பால்கூட, 'என்னங்க எந்த சேஃப்ட்டியும் இல்லாம, எதைப் பத்தியும் யோசிக்காம டக்னு விழுந்துட்டீங்க?!’னு ரவிகிட்ட கேட்டாங்க. 'எனக்கு எப்போ வலிக்கும்னு அண்ணனுக்குத் தெரியும். என்னை எப்பவும் அவர் கஷ்டப்படுத்த மாட்டார்’னு சொன்னான். அந்த நம்பிக்கைக்கு உண்மையான படமா வந்திருக்கு!''

''இயக்கத்தைவிட நடிப்பில் அதிகக் கவனம் செலுத்துறீங்களோ!''

''பிடிச்சுதான் நடிக்கிறேன். இப்போ 'நீ எல்லாம் நல்லா வருவடா’ படத்தில் விமலுடன் நடிக்கிறேன். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் கேரக்டர். தனுஷ் திடீர்னு ஒருநாள் வந்து, ''வேலையில்லா பட்டதாரி’ படத்தில் எனக்கு அப்பாவா நடிக்கிறீங்களா?’னு கேட்டார். கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே ஓ.கே. சொல்லிட்டேன்.

 மலையாளத்துல 'வசந்தின்டே கனல்வழிகளில்’ படத்தில் கம்யூனிஸ்ட் கிருஷ்ணப் பிள்ளையா நடிக்கிறேன். கிருஷ்ணப் பிள்ளை, காட்டுக்குள்ளே தலைமறைவா வாழ்ந்த கொடுங்காற்று. எப்போ வருவார்... என்ன பண்ணுவார்னு யாருக்கும் தெரியாது. ஆனா, புயல் மாதிரி வந்து சரிச்சுட்டுப் போயிடுவார்.

அப்போ ஆறாவது படிச்ச ஒரு பொண்ணு மூலம் செய்திகளைப் பரப்பினார். இப்போ அந்த அம்மாவுக்கு 80 வயசு. அவங்க என்னை கிருஷ்ணப் பிள்ளை கெட்டப்ல பார்த்ததும், 'அப்படியே ஐயாவைப் பார்த்த மாதிரியே இருக்கு’னு அழுதுட்டாங்க. அந்த அங்கீகாரம் போதும்னு ஒரு நிறைவு வந்திருச்சு!''

0 comments:

Post a Comment