Sunday 9 March 2014

வேலைக்கு போகும் பெண்களில் 78% பேர் மன அழுத்தம் + உடல் பருமன் போன்ற அவஸ்தை..!



உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையோட்டி தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான அசோச்சம் வேலைக்கு செல்லும் பெண்களின் உடல் மற்றும் மண நிலை குறித்து விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. டெல்லி, பெங்களூர், சென்னை, ஹய்தராபாத், லக்னோ, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை சேர்ந்த 10க்கும் அதிகமான துறைகளில் பணிபுரியும் பெண்கள் 2,700 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

 அதன்படி நவீன உலகில் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் நடுத்தர வயதினரும் பெரும் எண்ணிக்கையில் வேலைக்கு செல்வதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக 32 வயது முதல் 58 வயது வரையான பெண்களில் 78% பேர் கடும் பணிச்சுமை காரணமாக மண அழுத்தம், உடல் பருமன், முதுகுவலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மட்டுமில்லாமல் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர் என்றும் அசோச்சம் தெரிவித்துள்ளது.இளம் வயதினர் மாற்று வேலை தேடிக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் உள்ளது.

அதேசமயம், நடுத்தர வயதினருக்கு அடிக்கடி பணிமாற்றிக்கொள்வது சாத்தியம் இல்லாதது என்பதோடு இருக்கும் வேலையையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமும் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக அசோச்சம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், திருமணமாகாத பெண்களுக்கு குடும்பச்சுமைகள் மிகக்குறைவு ஆனால், மனமாகி குழந்தைபேறு இல்லாதோர் குழந்தைகள் இருந்தாலும் அவர்களை சரியாகப் பராமரிக்க முடியவில்லை என்று கவலைப்படுவோர், இளம் வயதினருக்கே அதிக முன்னுரிமை தருவதாக குற்றம் சாட்டுவோர் கூடுதல் நேர பணிச்சுமையால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு, இப்படியாக நடுத்தர வயது பெண்களின் சுமை நீள்வதாக அசோச்சம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஊடகம், பொழுதுபோக்கு, ஐடி -துறைகளில் பணிபுரியும் அனைத்து தர்ப்பு பெண்களும் தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்ற கவலையிலேயே பெரும்பாலான பணி நேரத்தை செலவிடுகின்றனர் என்றும், இதனால் உரிய காலத்துக்குள் பணியை முடிக்காமல் அவதியுற நேரிடுவதாகவும் அசோச்சம் சுட்டிக்காட்டியுள்ளது. கிராமங்களில் பணிக்கு செல்லும் பெண்கள் என்றால் வீட்டுக்கு அருகிலேயே அல்லது வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலேயே குடியிருப்பை மாற்றி அமைத்து கொள்கின்றனர்.

மேலும் நகர்புறங்களில் அதிக வாடகை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் பணிபுரியும் இடத்திலிருந்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்படுகின்றனர். இருந்தாலும், குறைவான போக்குவரத்து வசதிகள், நெரிசல்மிகுந்த பயண வாழ்க்கை போன்றவற்றால் பெண்கள் சிரமப்படுவதாகவும் அசோச்சம் கூறியுள்ளது.

இதன் காரணமாக ஏற்படும் மனரீதியான நோய்கள், உடல் உபாதைகளுக்காக மாதந்தோறும் சராசரியாக தங்களது ஊதியத்தில் ரூ.5,000 வரை நடுத்தர பெண்கள் செலவிட வேண்டியுள்ளதாக அசோச்சம் தெரிவித்துள்ளது. 

0 comments:

Post a Comment