Saturday 22 March 2014

அம்மான் பச்சரிசி... என்ன ஒண்ணும் புரியலையா..? - அப்போ இதப்படிங்க..!



அரிய மூலிகைகளின் அற்புத மருத்துவக் குணங்களை ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். காலுக்கடியில் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை அறியாமலே தேவையற்ற களையாக நினைத்து அழித்துவிட்டனர். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்களின் கூடாரமாக தங்கள் உடம்பை ஆக்கிக்கொண்டு, தினமும் மாத்திரை விழுங்கினால்தான் வாழ்வு என்று வாழ்கின்றனர்.

இந்த நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவேயாகும்..

முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்-த-கைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.

இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

Tamil - Amman Pacharisi

English - Snake weed

Sanskrit - Dugdhika

Telugu - Reddine narolu

Malayalam - Nela paalai

Botanical name - Euphorbia hirta

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

- அகத்தியர் குணபாடம்

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.

மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். தாய்ப்பால் சரியாக சுரக்காததால் சிலர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் அதாவது பசும்பாலோ கடையில் வாங்கிய பாலோ கொடுப்பார்கள். இதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

மலச்சிக்கலைப் போக்க

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

பெண்களுக்கு

வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாவார்கள். அதிகமா-க கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும் .

மரு நீங்க

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

தாது பலப்பட

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.

0 comments:

Post a Comment